டாக்டர் பிரகாஷுக்கு ஆயுள் தண்டனை!!
சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் பிரகாஷ். எலும்பியல் மருத்துவரான இவர் அண்ணா நகரில் மருத்துவமனை நடத்தி வந்தார்.
தனது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பெண்களை மயக்கி, அவர்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து அவற்றை இன்டர்நெட் மூலம் விற்பனை செய்ததாக சர்ச்சையில் சிக்கினார் பிரகாஷ்.
இவரிடம் சிக்கியவர்கள் பெரும்பாலும் கல்லூரி மாணவிகள்தான். இதுதவிர பல்வேறு மாணவர்களையும் பெண்களுடன் ஆபாச கோலத்தில் இருக்க விட்டு படம் பிடித்து அவற்றையும் இன்டர்நெட்டில் உலவ விட்டார் டாக்டர் பிரகாஷ்.
இந்த நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த கணேசன் என்ற வாலிபர் கடந்த 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி வடபழனி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து, டாக்டர் பிரகாஷ் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு உடந்தையாக இருந்ததாக வார்டு பாய் சரவணன், கார் டிரைவர் விஜயன், எக்ஸ்ரே தொழில்நுட்பாளர் ஆசிப், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் நிக்சன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. ஐந்து பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நிக்சன் மட்டும் கைதான மூன்று மாதங்களில் ஜாமீனில் வெளியே வந்தார். மற்ற நான்கு பேரும் கடந்த 6 வருடங்களாக சிறையில் அடைக்கப் பட்டு இருந்தனர். இவர்களில் பிரகாஷை தவிர மற்ற மூவருக்கும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. டாக்டர் பிரகாஷின் ஜாமீன் மனுவை ஆறாவது முறையாக நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கு விசாரணை சென்னை 5வது விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி ராதா முன்பு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி தனது தீர்ப்பை அறிவித்தார்.
அப்போது நிக்சனைத் தவிர மற்ற நான்கு பேரையும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். நிக்சன் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
டாக்டர் பிரகாஷ், கற்பழிப்பு மற்றும் கொலை முயற்சி வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அதேசமயம், ஆள் கடத்தல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், விபச்சாரம், கொலை மிரட்டல், பெண்களை தவறாக சித்தரித்தல், ஆயுத சட்டம் உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார்.
வார்டு பாய் சரவணன், கார் டிரைவர் விஜயன், எக்ஸ்ரே தொழில்நுட்பாளர் ஆசிப் ஆகியோர் ஆள் கடத்தல், சதி மற்றும் உடந்தையாக செயல்பட்டது, விபச்சார தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் என நீதிபதி ராதா தெரிவித்தார்.
இன்று பிரகாஷ் உள்ளிட்ட நான்கு பேருக்குமான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. பிரகாஷுக்கு நீதிபதி ராதா ஆயுள் தண்டனை விதிப்பதாக அறிவித்தார்.
சரவணன், விஜயன், ஆசிர் குணசிங் ஆகிய மற்ற 3 பேருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
கடந்த 6 ஆண்டுகளாக பிரகாஷ் சிறைவாசம் அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர ரூ. 1.25 லட்சம் அபராதமும் டாக்டர் பிரகாஷுக்கு விதிக்கப்பட்டது.
சரவணன், விஜயன் மற்றும் ஆசிர் குணசிங் ஆகியோருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை தவிர தலா ரூ. 2500 அபராதமும் விதிக்கப்பட்டது.
நான்கு பெரும் பெண்களுக்கு எதிராக மிகக் கொடூரமான குற்றத்தை இழைத்துள்ளனர். எனவே இவர்களை மன்னிக்க முடியாது என்று நீதிபதி ராதா தெரிவித்தார்.
இந்த நிலையில், செய்தி சேகரிக்க கூடியிருந்த செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள், பிரகாஷை படம் எடுக்க முயன்றபோது வட பழனி காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு காவலர் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.