'டிரவுசருக்கு' மாறிய டாக்டர் பிரகாஷ்!
பெண்களை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்து அவற்றை இன்டர்நெட்டில் உலவ விட்ட சர்ச்சையில் சிக்கி கைதானவர் டாக்டர் பிரகாஷ். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று பிரகாஷ் உள்ளிட்ட நான்கு பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
டாக்டர் பிரகாஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதுதவிர கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்ப குற்றத் தடுப்புச் சட்டம், பெண்களை தவறாக சித்தரித்தது, விபச்சாரத் தடுப்புச் சட்டம், இன்டர்நெட்டில் பெண்களின் படங்களை ஆபாசமான முறையில் வெளியிட்டது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தனியாக 38 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அனைத்து தண்டனைகளையும் அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எனவே அவர் அதிகபட்சம் ஆயுள் தண்டனையை மட்டுமே அனுபவிக்க வேண்டி வரும்.
தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று முதல் புழல் மத்திய சிறையில், தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கான அறைக்கு பிரகாஷ் மாற்றப்பட்டார்.
அவர் வருமான வரி கட்டுபவர் என்பதால் ஏ 1 பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த அறையில் பிரகாஷையும் சேர்த்து மொத்தம் 20 கைதிகள் இருக்கிறார்கள்.
தண்டிக்கப்பட்ட கைதிகளுக்கான வெள்ளை நிற தொப்பி, அரை டிராயர், சட்டை பிரகாஷுக்கு தரப்பட்டுள்ளது. அவரது அறையில் டிவி இருக்கும். தனியாக மேசை, சேர் தரப்படும்.
வாரத்திற்கு அவருக்கு நான்கு வேளை கோழிக் கறி சாப்பாடு தரப்படும். மற்ற நாட்களில் சாம்பார் சாதம், ரச சாதம் உள்ளிட்டவை தரப்படும்.
வாரத்தில் 2 நாட்கள் உறவினர்கள் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படுவர். 2 போர்வை, தலையணை, ஒரு ஜமுக்காளம் ஆகியவை தரப்படும். இதுதவிர சாப்பாட்டு தட்டு, மக் ஆகியவையும் தரப்டும். படுக்க கட்டிலும் கொடுக்கப்படும்.
தோட்டவேலை, தச்சு வேலை உள்ளிட்ட பல்வேறு வேலைகள் உள்ளன. அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து டாக்டர் பிரகாஷ் இனி சிறையில் வேலை பார்க்க வேண்டும்.
பிரகாஷ் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர். அவர் கைது செய்யப்பட்ட உடனேயே அவரது மனைவி லதா என்கிற ஸ்ரீலட்சுமி விவாகரத்து செய்து விட்டார். தனது வளர்ப்பு மகளுடன் பாலக்காட்டுக்கே திரும்பிப் போய் விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.