தலைக்காயத்தால்தான் பெனாசிர் இறந்தார்: ஸ்காட் போலீஸ்
கடந்த ஆண்டு டிசம்பர் 27ம் தேதி பெனாசிர் பூட்டா கொல்லப்பட்டார். அவர் எப்படி இறந்தார் என்பதில் பெரும் சர்ச்சை நிலவியது. சுட்டுக் கொல்லப்பட்டார் என ஒரு தகவலும், குண்டுவெடிப்பில் இறந்ததாக ஒரு தகவலும், ஜீப்பின் இரும்புக் கம்பி அவரது தலையில் பட்டதால் இறந்தார் என ஒரு தகவலும் வெளியானது.
இந் நிலையில் பெனாசிர் படுகொலை தொடர்பாக விசாரிக்க வருமாறு ஸ்காட்லாந்து யார்டு போலீஸுக்கு பாகிஸ்தான் அரசு அழைப்பு விடுத்தது.
இதையடுத்து பாகிஸ்தான் வந்த ஸ்காட் போலீஸ் குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர். பெனாசிர் பூட்டோ கொல்லப்பட்ட இடத்தையும் அவர்கள் விரிவாக ஆய்வு நடத்தினர். இந்த விசாரணையைத் தொடர்ந்து அவர்கள் தற்போது பாகிஸ்தான் அரசிடம் தங்களது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
பாகிஸ்தான் அரசிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், பாகிஸ்தான் அரசு முன்பு கூறியதைப் போலவே, தான் நின்று கொண்டிருந்த ஜீப்பின் இரும்புக் கம்பி தலையில் பலமாக இடித்ததால்தான் பெனாசிர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், பெனாசிர் பூட்டோ மீது எந்தவித துப்பாக்கிக் குண்டும் பாயவில்லை. துப்பாக்கி சூட்டில் அவர் பலியாகவில்லை.
மனித வெடிகுண்டு வெடித்த அதிர்ச்சியில் அவர் வேகமாக தப்ப முயன்றபோது அவர் இருந்த ஜீப்பின் இரும்புக் கம்பி தலையில் மிக பலமாக மோதியது. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதுவே மரணத்திற்குக் காரணமாகியுள்ளது.
பெனாசிர் மரணச் சம்பவத்தில் ஒரே ஒருவர் மட்டுமே தொடர்பு கொண்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
அந்த ஒரு நபர் மட்டுமே பெனாசிரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். பின்னர் அவரே தனது உடலில் கட்டியிருந்த குண்டையும் வெடிக்கச் செய்துள்ளார். அப்போது அந்த நபர் பெனாசிர் இருந்த ஜீப்புக்கு வெகு அருகே நின்றுள்ளார்.
குண்டை வெடிக்கச் செய்தபோது ஏற்பட்ட பெரும் அதிர்ச்சியில் பெனாசிர் தப்ப முயன்றுள்ளார். அப்போது அவரது தலை ஜீப்பின் மேல் பக்க இரும்புக் கம்பியில் மிக பலமாக இடித்துள்ளது. இதுதான் அவரது மரணத்திற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெனாசிர் மரணம் குறித்து ஸ்காட்லாந்து யார்டு அதிகாரிகள் தெரிவித்துள்ள இந்தக் கருத்தால் மீண்டும் பெனாசிர் மரண விவகாரம் அங்கு சூடுபிடிக்கும் எனத் தெரிகிறது.
இந்த விசாரணை அறிக்கையை பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி நிராகரித்து விட்டது. ஐ.நா. விசாரணைதான் உண்மையை வெளிப்படுத்தும் என அக்கட்சி ெதரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷெர்ரி ரஹ்மான் கூறுகையில், பெனாசிர் துப்பாக்கி குண்டு பட்டுத்தான் இறந்தார். இதுதான் எங்களது நிலை. இந்த அறிக்கையை நாங்கள் ஏற்க மாட்டோம்
என்றார்.
இதற்கிடையே, பெனாசிர் இறந்து 40 நாள் துக்கம் முடிவடைந்தது. இதையொட்டி அவரது பிறந்த ஊரான நாதிரோவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் குவிந்தனர். அங்கு சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நடந்தது. அவர்களிடையே பெனாசிரின் கணவர் ஆசிப் அலி சர்தாரி பேசினார்.
பிப்ரவரி 18ம் தேதி முதல் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தேர்தல் பிரசாரம் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.