குண்டு வீச்சு பயிற்சியின்போது 10 போலீஸார் காயம்
நெல்லை: நெல்லையில் கண்ணீர் புகை குண்டு மற்றும் கையெறி குண்டுவீச்சு பயிற்சியில் ஈடுபட்ட 10 ஆயுதப்படை போலீசார் காயமடைந்தனர்.
பாளை ஆயுதப்படை போலீசாருக்கு கலவரத்தை அடக்குவது குறித்து கமண்டோ பயிற்சி அளிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி விஜயகுமார் உத்தரவின் பேரில் பாளையங்கோட்டை ஆயுதப்படை பிரிவை சேர்ந்த 385 ஆண், 85 பெண் போலீசாருக்கு கடந்த மாதம் 21ந் தேதி முதல் கமண்டோ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பயிற்சியில் மலையேறுதல், துப்பாக்கி சுடுதல், காடுகளில் பயணம் செய்தல், கலவரத்தை அடக்குதல், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
வெள்ள காலத்தில் தண்ணீரில் சிக்கியவர்களை காப்பாற்றுவது எப்படி என்பது குறித்து நெல்லை தாமிராபரணி ஆற்றில் நேற்று கமாண்டோ படையினர் பயிற்சி அளித்தனர்.
இன்று காலை பாளை ஆயுதப்படை மைதானத்தில் வைத்து கலவரத்தை அடக்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கலவரக்காரர்கள் கல் வீசி தாக்குவது போலவும், அவர்களை போலீசார் தூப்பாக்கி சூடு, மற்றும் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டியும் அடிப்பது போன்றும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
கண்ணீர் புகை குண்டுகளை வீசியது போது பிளாஸ்டிக் டின் வெடித்து சிதறியதில் 3 போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுதது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கையெறி குண்டுகளை வீசி செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நிற்காமல் அருகில் நின்றதால் பயிற்சியில் ஈடுபட்ட பாளையங்கோட்டை ஆயுதப்படை போலீசார் 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் அங்குள்ள போலீஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த பயிற்சிகளை மாநகர கமிஷனர் மஞ்சுநாதா, துணை கமிஷனர் தினகரன், ஆயுதப்படை உதவி கமிஷனர் ராஜா, இன்ஸ்பெக்டர் வின்சென்ட் ஆகியோர் பார்வையிட்டனர்.












Click it and Unblock the Notifications