முன்னாள் எம்.எல்.ஏ. ஹேமச்சந்திரன் மரணம்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் தொகுதி முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ஹேமச்சந்திரன் புற்று நோயால் மரணமடைந்தார்.
77 வயதாகும் ஹேமச்சந்திரன் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் நாகர்கோவில் கொண்டு வரப்பட்டது. அங்குள்ள மாவட்ட சிஐடியூ அலுவலகத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
திருமணம் செய்து கொள்ளாமலேயே கடைசிக் காலம் வரை வாழ்ந்த ஹேமச்சந்திரன், திருவட்டார் தொகுதி எம்.எல்.ஏவாக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். திருவட்டார் மீட்புப் போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர்.
மிகவும் எளிமையான ஹேமச்சந்திரன் தொண்டர்களோடு தொண்டர்களாக வாழ்ந்தவர். அவரது மறைவுக்கு முதல்வர் கருணாநிதி, மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.