For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேனி திமுக கோஷ்டி பூசல் உச்சகட்டம்!-கத்திக் குத்து, அலுவலகம் சூறை

By Staff
Google Oneindia Tamil News

Selvendran
தேனி: தேனியில் திமுக உட்கட்சிப் பூசலில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். ஒரு கோஷ்டியின் திமுக அலுவலகத்தை இன்னொரு கோஷ்டியைச் சேர்ந்த திமுகவினர் சூறையாடினர். திமுக பேனர்களை திமுகவினரே கிழித்து எறிந்தனர்.

இந்த சம்பவத்தில் டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் உள்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட திமுகவில் மாவட்டச் செயலாளர் மூக்கையா ஒரு அணியாகவும், கம்பம் செல்வேந்திரன் இன்னொரு அணியாகவும் மிகச் சிறப்பாக கோஷ்டி அரசியல் நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் திமுக உட்கட்சி தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. கட்சிச் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜெயபாண்டி கம்பம் புதுப்பட்டியில் நின்று கொண்டிருந்தபோது அங்கு திடீரென அரிவாள், பட்டாக் கத்தி, உருட்டை கட்டைகளுடன் வந்த ஒரு கும்பல் அவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில் கத்திக் குத்து விழுந்து ஜெயபாண்டி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

அவரை திமுக நிர்வாகிகள் சிலர் காப்பாற்றி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து மூக்கையா அணியினர் மீது ஜெயபாண்டி உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் திமுக செயலாளர் விருமாண்டி, அவரது மகன்கள் கண்ணன், மணிகண்டன், முருகேசன், மற்றும் தமிழரசன் ஆகியோர் தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

அதே போல விருமாண்டியின் மகன் மணிகண்டனும் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், தனது தந்தையின் படத்தை கிராபிக்ஸ் மூலம் சில சமூக விரோதிகளுடன் இணைத்து போஸ்டர் அடித்து அவமானப்படுத்தியதால் அதை தட்டிக் கேக்க போனபோது ஜெயபாண்டியும் அவரது ஆதரவாளர்களும் தங்களை அடித்து உதைத்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி கம்பம் செல்வேந்தின் அணியினர் வைத்திருந்த விளம்பர போர்டு மற்றும் தேர்தல் அலுவலகம் ஆகியவையும் திமுகவை சேர்ந்த சிலராலேயே அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தாளத்திற்கு இரு பக்கம் இடி என்பது போல திமுக உட்கட்சி தேர்தலால் தவிக்கும் போலீசார் இரு தரப்பு புகார்களையும் வாங்கிக் கொண்டு, இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து தங்களுக்கு டிரான்ஸ்பர் ஏதும் வராமல் பாதுகாத்து கொண்டுள்ளனர்.

டெல்லி சிறப்புப் பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X