தேனி வனப் பகுதிகளில் நக்சல் வேட்டை - தீவிர கண்காணிப்பு
தேனி: தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் துப்பாக்கிகள் கொள்ளை போன சம்பவத்தைத் தொடர்ந்து தேனி மாவட்ட வனப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பும், தேடுதல் வேட்டையையும் போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் காணமால் போயுள்ளன. 6 ரைபிள்கள், ஒரு வாக்கி டாக்கி ஆகியவை திருடப்பட்டுள்ளன. அவற்றை நக்சலைட்டுகள் திருடிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து தர்மபுரி மாவட்டம் முழுவதும் வாக்கி டாக்கிகளைப் பயன்படுத்த வேண்டாம் என போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் புதிய நக்சலைட் முகாமாக மாறியுள்ள தேனி மாவட்ட வனப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக வருசநாட்டுப் பகுதியில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போலீஸாருடன் இணைந்து அதிரடிப்படையினர் தீவிர கண்காணிப்பிலும், தேடுதல் வேட்டையிலும் இறங்கியுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. சந்தேகப்படும்படியான நபர்களை தீவிரமாக கண்காணிக்குமாறு காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வருசநாடு மலை, பெரியகுளம் வனப் பகுதி, போடி நாயக்கனூர் மலைப் பகுதி ஆகியவற்றில் உள்ள கிராமங்களை தீவிரமாக கண்காணிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வாகனச் சோதனையும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
தொலைதூர பகுதிகளில் சாதாரண உடையிலான போலீஸார் ரோந்து சுற்றி வருகின்றனர். தங்களது கிராமங்களுக்கு புதியவர்கள் யாரேனும் வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கிராமத்தினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்ட வனப் பகுதிகளில் அதிரடிப்படையினர் புகுந்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
முன்பு தர்மபுரி மாவட்ட வனப் பகுதிகள் தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகள் கையில் இருந்தது. ஆனால் இப்போது அங்கு அவர்களின் நடமாட்டம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து தேனி மாவட்ட வனப்பகுதிகளை நக்சலைட்டுகள் தங்களது முகாமாக மாற்றிக் கொண்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக தேனி மாவட்ட வனப் பகுதிகளில் நக்கசலைட்டுள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதுவரை சட்டீஸ்கரைச் சேர்ந்த ஒரு நக்சலைட் உள்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.