சொத்துத் தகராறில் பாட்டியைக் கொன்ற பேரன் கைது
சென்னை: சென்னை ஆவடியில் சொத்துத் தகராறில் தனது பாட்டியைக் கொன்ற பேரனை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ஆவடி பக்தவச்சலம் நகரைச் சேர்ந்தவர் ராதாம்பாள் (88). இவருக்கு சொந்தமாக 4 வீடுகள் உள்ளன. அந்த வீடுகளை வாடகைக்கு விட்டு அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து ராதாம்பாள் வாழ்ந்து வந்தார்.
இவருக்கு சண்முகம் (வயது 53) என்ற மகனும், அவர் மூலம் வசந்தகுமார் (வயது 27) என்ற பேரனும் உள்ளனர். வசந்தகுமார் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
பாட்டிக்குச் சொந்தமான வீடுகளை தனது பெயருக்கு எழுதி வைக்கும்படி வசந்தகுமார் தனது பாட்டியை வற்புறுத்தி வந்தார். இதுதொடர்பாக அடிக்கடி அவருடன் தகராறிலும் ஈடுபட்டு வந்தார்.
நேற்று வேலை முடிந்த நள்ளிரவில் வீட்டுக்கு வந்தார்.
அதிகாலையில் தனது தந்தையை எழுப்பி பாட்டி படுக்கையில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்து விட்டதாக வசந்தகுமார் கூறியுள்ளார்.
பதறிப் போன சண்முகம் போய் பார்த்தபோது, ராதாம்பாள் உடல் மேஜை ஒன்றில் கிடத்தப்பட்டு மாலை அணிவித்த நிலையில் இருந்தது.
இதனால் மகன் மீது சண்முகத்திற்கு சந்தேகம் வந்தது. உடனடியாக ஆவடி போலீஸுக்குத் தகவல் கொடுத்தார்.
போலீஸார் வந்து ராதாம்பாள் உடலைப் பார்த்தபோது, அவரது உடலில் கத்திக் குத்துக் காயங்களும், அடித்த காயங்களும் தெரிந்தது.
இதையடுத்து வசந்தகுமாரிடம் விசாரித்தபோது அவர், தான்தான் பாட்டியைக் கொன்றதாக ஒத்துக் கொண்டார். இதையடுத்து வசந்தகுமாரை போலீஸார் கைது செய்தனர்.
சொத்தைத் தர பாட்டி மறுத்ததால் ஆத்திரத்தில் அவரைக் கொன்று விட்டதாக போலீஸாரிடம் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.