ஸ்டாலினுக்கு அ.இ.ச.ம.க. சவால்!
மதுரை: நெல்லையில் நடந்தது (திமுக இளைஞரணி மாநாடு) இளைஞர் மாநாடு அல்ல. மதுரையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நடத்தியுள்ள மாநாடுதான் உண்மையான இளைஞர் மாநாடு. இதேபோன்ற ஒரு மாநாட்டை மு.க.ஸ்டாலினால் நடத்த முடியுமா என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சவால் விட்டார்.
நேற்று மதுரையில் நடைபெற்ற அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாநாட்டில் அக்கட்சியின் பொது செயலாளர் கரு. நாகராஜன் பேசுகையில்,
இது அடுத்த தலைமுறைக்கான அரசியல். விருதுநகரில் காமராஜருக்கு மணி மண்டபம் கட்டிய 150 நாளில் கட்சி துவங்கப்பட்டுள்ளது. இது வரை 150 நாளில் யாரும் கட்சி துவங்கியதாக சரித்திரம் கிடையாது.
நெல்லையில் சிலரை வைத்துக் கொண்டு இது தான் இளைஞரணி மாநாடு என்று மு.க.ஸ்டாலின் கூறினார். அந்த திமுக மாநாட்டை மிஞ்சும் வகையில் இங்கு பல லட்சக்கணக்காண இளைஞர்கள் கூடியுள்ளனர். அது தோல்வி மாநாடு. இது தான் வெற்றி மாநாடு.
நாளை எழுதுங்கள் எது இளைஞரணி நாடு என்று. இதே போல ஒரு இளைஞரணி மாநாட்டை ஸ்டாலினால் கூட்ட முடியுமா? உண்மையான இளைஞரணி மாநாடு இது தான்.
சிலர் சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடும் என்று கருதுகின்றனர். அது நடக்காது. சரத்குமார் இங்கு மாநாடு நடத்துகிறார் என்பதால் விஜயகாந்த் கோவில்பட்டியில் வந்து அங்கு ஒரு மாநாடு நடத்துகிறார். இது தான் அரசியல் நாகரிகமா?
மக்களை ஏமாற்றி, லட்சியம் இன்றி, கோட்பாடு இன்றி சில கட்சிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. எம்.எல்.ஏ. தேர்தலில் ஒரு கூட்டணி, எம்.பி. தேர்தலில் ஒரு கூட்டணி, உள்ளாட்சித் தேர்தலில் ஒரு கூட்டணி என்று உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு விலக்குங்கள்.
எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என விஜயகாந்த் தமிழக மக்களிடம் கேட்ட போது 234 தொகுதிகளில் மக்கள் அவருக்கு தந்தது ஒரே ஒரு தொகுதியை மட்டுமே.
கலைஞரும், ஜெயலலிதாவும் மாறி மாறி ஆட்சி செய்ய முயல்கின்றனர். எனக்கு முதல்வர் பதவி தேவையில்லை என்று கலைஞர் அறிவிக்க தயாரா. தமிழகத்தில் மொழிப்போர் நடத்தி தமிழர்களின் வாழ்க்கையை கெடுத்தது திமுக என்றார் கரு.நாகராஜன்.
போலீசாரின் உத்தரவால் அவதிக்குள்ளான தொண்டர்கள்:
சரத்குமாரின் முதல் அரசியல் மாநாட்டிற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்தனர்.
இரவு மாநாடு முடிந்து திரும்பும் வேளையில் கட்சித் தொண்டர்களால் ஏதேனும் விரும்பத்தகாத அசம்பாவித சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது என்பதற்காக திருமங்கலம் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளக் கடைகளை அடைக்க போலீசார் அடைக்க உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை மாலை 6 மணியில் இருந்தே திருமங்கலம் நகர் முழுவதும் போலீசார் மைக் மூலம் அறிவித்த வண்ணம் இருந்தனர்.
இதனால் மாநாடு முடிந்து இரவு சிற்றுண்டியை திருமங்கலத்தில் சாப்பிடலாம் என வந்த தொண்டர்களுக்கு ஒரு டீக்கடை கூட இல்லாதது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
போலீசாரின் இந்த திடீர் உத்தரவால் சரத் கட்சி தொண்டர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.