விஜயகாந்த்துடன் காங். மேலிடப் பார்வையாளர் சந்திப்பு: கருணாநிதி டெல்லி பயணம் ரத்து!
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் விவகாரம் தொடர்பாக திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே நாளுக்கு நாள் அதிருப்தி அதிகரித்து வருகிறது. இந் நிலையில், திமுக தனது பரம வைரியாக நினைக்கும் விஜயகாந்த்துடன், தமிழக காங்கிரஸ் கட்சிக்கான பொறுப்பாளர் அருண்குமார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக கர்நாடகத்தைச் சேர்ந்த அருண் குமார் சில மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். ஆனால், இதுவரை அவர் கூட்டணித் தலைவரான முதல்வர் கருணாநிதியை சந்திக்கவில்லை.
இதனால் எரிச்சலில் இருந்து வருகிறது திமுக. இந் நிலையில், விஜய்காந்தை சந்தித்துப் பேசியுள்ளார் அருண் குமார். ஆனால், இச் சந்திப்பு குறித்து இரு தரப்பும் வெளியில் சொல்லாமல் அமைதி காத்து வந்தன.
சமீபத்தில் சட்டசபையில் காங்கிரஸ் வெளிநடப்பு செய்து திமுகவுக்கு அதிர்ச்சி தந்ததிலும் அருண் குமாருக்கு பெரும் பங்குண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் திருச்சியில் நடந்த காங்கிரஸ் மண்டல மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்த அருண்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது விஜயகாந்த்துடன் பேச்சு நடத்தியதை ஒப்புக் கொண்டார்.
அவர் கூறுகையில், நானும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும் சென்னை விமான நிலையத்தில் தான் சந்தித்தோம். அப்போது, அரசியல் சம்பந்தமாக பேசினோம். அவரது செயல்பாடுகள் எங்களை கவர்ந்துள்ளன. அவருடன் நடத்திய பேச்சு விவரத்தை நேரம் வரும்போது வெளியிடுகிறேன்.
ராஜிவ் கொலைக்கு காரணமான விடுதலைப் புலிகள் இயக்கம், இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த இயக்கத்தை ஆதரித்து பேசும் அனைவரும் நாட்டின் எதிரிகள் தான். இக்கருத்தில், தி.மு.க, உட்பட காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளன.
திருமாவளவன், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுவது முரண்பாடாக உள்ளது. அவரது பேச்சை நாடு ஏற்றுக் கொள்ளாது.
சேது சமுத்திர திட்டம், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த மிகவும் அவசியம். மக்கள் உணர்வை பாதிக்காத வகையில் அத்திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்.
தமிழக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எவ்விஷயத்திலும் தோழமை கட்சிகளை அவமானப்படுத்த விரும்பவில்லை என்றார் அருண்குமார்.
திமுகவை கழற்றிவிட்டுவிட்டு விஜயகாந்த்துடன் கூட்டணி சேரலாம் என கடந்த சில காலமாகவே இளங்கோவன் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
அதே போல விஜய்காந்தை காங்கிரசுடன் கூட்டணி அமைக்க வைக்கும் வேலைகளில் தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும் தீவிரம் காட்டி வருகிறார். இந் நிலையில் அருண்குமார்-விஜய்காந்த் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தத் தகவல்களை அறிந்து திமுக தரப்பு கடும் எரிச்சலில் உள்ளது.
கருணாநிதியின் டெல்லி பயணம் திடீர் ரத்து:
இதற்கிடையே இன்று முதல்வர் கருணாநிதி மேற்கொள்ளவிருந்த டெல்லி பயணம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாளை நடைபெறும் மத்திய திட்டக்கமிஷன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கருணாநிதி இன்று டெல்லி செல்லவிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் முதல்வரின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டு விட்டது. அவருக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் கூறியதால் பயணம் ரத்தானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதிக்கு பதிலாக நிதியமைச்சர் அன்பழகன், தலைமைச் செயலாளர் திரிபாதி, நிதித்துறைச் செயலாளர் ஞானதேசிகன் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியாவுடன் அவர்கள் பேச்சு நடத்தி தமிழக திட்டங்களுக்கான நிதியைப் பெறுவர்.