ஒகேனக்கல் குடிநீர் திட்டம்-26ல் கருணாநிதி அடிக்கல்
சென்னை: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு ரூ. 1,141 கோடியை வழங்க ஜப்பான் சர்வதேச கூட்டுறவு வங்கி முன் வந்துள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
இத் திட்டத்துக்கு நிதி பெற ஜப்பானிய அதிகாரிகளுடன் பேச்சு நடத்த டோக்கியோ சென்ற ஸ்டாலின் இன்று காலை சென்று திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இத் திட்டத்திற்கான செலவில் 85 சதவீதத்தை கடனாக வழங்க ஜப்பான் முன் வந்துள்ளது. இதையடுத்து வரும் 26ம் தேதியே இத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறும். முதல்வர் கருணாநிதி இதைத் துவக்கி வைப்பார்.
மேலும் இத் திட்டத்தின் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நீரில் புளூரைட் அதிகமாக இருப்பதை குறைத்து நீர் சுத்தப்படுத்தப்பட்டு மக்களுக்கு வழங்கப்படும். இந்தக் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் இரு மாவட்ட மக்களின் நீண்ட நாள் குடிநீர் பிரச்சனைக்கு முடிவு கட்டப்படும். புளுரேசிஸ் பிரச்சனையும் தீர்க்கப்பட்டு மக்களின் உடல் நலம் காக்கப்படும்.
இத் திட்டத்தால் 3 நகராட்சிகள், 16 நகர்ப்புற பஞ்சாயத்துகள், 1,785 கிராம பஞ்சாயத்துகளின் கீழ் வசிக்கும் 30 லட்சம் மக்கள் பலனடையப் போகிறார்கள்.
அதே போல திருச்சியில் குடிநீர் சப்ளையை மேம்படுத்தவும், கழிவு நீர் சாக்கடைத் திட்டத்தை விரிவாக்கவும் நிதியுதவி வழங்க ஜப்பான் வங்கி முன் வந்துள்ளது. இத் திட்டத்துக்கு ரூ. 344 கோடி தேவை. இதில் ரூ. 300 கோடியை வழங்க ஜப்பான் முன் வந்துவிட்டது. இதற்கான ஒப்பந்தம் டெல்லியில் அடுத்த மாதம் கையெழுத்தாகும். இதைத் தொடர்ந்து உடனடியாக திட்டம் தொடங்கப்படும்.
மேலும் சிதம்பரம், பட்டுக்கோட்டை, பேர்ணாம்பட்டு, ஆம்பூர், ராமேஸ்வரம் ஆகிய நகராட்சி பகுதிகளிலும் பாதாள சாக்கடை அமைக்க ஜப்பானிய வங்கி அதிகாரிகளுடன் பேசினேன். விரைவில் இந்த உதவிகளும் வந்து சேரும் என்று நம்புகிறோம்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் குறித்தும் பேசினேன். ரூ. 9,700 கோடி செலவில் 46.5 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்படும் இந்த ரயில் திட்டம் குறித்து விளக்கி உதவி கோரியுள்ளோம். உதவ ஜப்பான் தயாராக உள்ளது என்றார் ஸ்டாலின்.