அமீத் குமார் கிளினிக், வீட்டில் சிபிஐ ரெய்டு
டெல்லி: சிறுநீரக மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள டாக்டர் அமீத்குமாரின் நர்சிங ஹோம், கெஸ்ட் ஹவுஸ் ஆகியவற்றில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். இதுதவிர மேலும் 6 இடங்களிலும் சோதனை நடந்தது.
டெல்லி அருகே குர்கானில் 500க்கம் மேற்பட்டோரிடம் அடி மாட்டு விலைக்கு சிறுநீரகங்களைப் பெற்று, வெளிநாட்டினரிடம் அவற்றை பல லட்சம் ரூபாய்க்கு விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்த அமீத்குமார் நேபாளத்தில் கைது செய்யப்பட்டு தற்போது இந்தியா கொண்டு வரப்பட்டு சிபிஐயின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
12 நாள் காவலில் எடுத்துள்ள சிபிஐ அதிகாரிகள், அமீத்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக குர்கானில் உள்ள ஆறு இடங்கள், அமீத்குமாரின் நர்சிங் ஹோம், கெஸ்ட் ஹவுஸ் ஆகியவற்றில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
மேலும் சில நர்சிங் ஹோம்கள், கெஸ்ட் ஹவுஸ்களிலும் சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது, தடயவியல் நிபுணர்களும் உடன் இருந்தனர்.
மேலும், அமீத்குமாரின் செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாக மொராதாபாத் போலீஸாரால் கைது செய்யப்பட்ட உபேந்திரா, ஜெகதீஷ் நை, கியாசுதீன் ஆகிய மூவரையும் சிபிஐ தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.
குர்கான் நீதிமன்றத்தில் நேற்று 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன் பின்னர் அவர்களை தங்களது காவலில் அனுமதிக்குமாறு சிபிஐ கோரியது. இதையடுத்து பிப்ரவரி 16ம் தேதி வரை அவர்களை விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.