பஹ்ரைனில் தொழிலாளர்கள் ஸ்டிரைக் தீவிரம் - 2 இந்தியர்கள் நாடு கடத்தல்
பஹ்ரைனில் உள்ள ஹபீரா கான்ட்ராக்டிங் கம்பெனி என்கிற நிறுவனத்தில் பணியாற்றி வரும் 2000க்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்த நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த போராட்டத்திற்கு பஹ்ரைன் தொழிற்சங்கங்களின் பேரவை ஆதரவு தெரிவித்ததால் போராட்டம் தீவிரமடைந்தது. இந்தியத் தொழிலாளர்களின் போராட்டம் குறித்து பஹ்ரைன் தொழிற்சங்கங்களின் பேரவை செயலாளர் ஜாபர் கலீல் கூறுகையில், பஹ்ரைனியர்களுக்கு உள்ள அதே உரிமை இந்தியத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நாட்டுத் தொழிலாளர்களுக்கும் உண்டு.
தங்களது குறைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு. அவர்களது குறைகளை அதிகாரிகள் உரிய முறையில் கவனிக்க வேண்டும் என்றார்.
இந்த நிலையில் இன்று அதிரடியாக இரண்டு இந்தியத் தொழிலாளர்களை பஹ்ரைன் அரசு நாடு கடத்தியது. பாலகிருஷ்ணன் மற்றும் முகம்மது சபி ஆகிய அந்த இரு இந்தியத் தொழிலாளர்களும், தொழிலாளர்களின் செய்தித் தொடர்பாளர்களாக செயல்பட்டு வந்தனர். இதையடுத்து இருவரையும் உடனடியாக நாடு கடத்த பஹ்ரைன் அரசு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து இருவரும் தனித் தனி விமானங்களில் இன்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் இந்தியத் தொழிலாளர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விமானத்தில் ஏறும் முன்பு செய்தியாளர்களிடம் பாலகிருஷ்ணன் கூறுகையில், நிறுவன தலைவர் இஸா முகம்மது அப்துல்ரஹீம், எங்களது முகாமுக்கு தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஐந்து நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
அடுத்த மாதம் முதல் ஊதியத்தை உயர்த்தித் தருவதாக அவர் தெரிவித்தார். ஆனால் எவ்வளவு உயர்வு என்பதை அவர் தெரிவிக்கவில்லை என்றார் பாலகிருஷ்ணன்.
இதற்கிடையே, பஹ்ரைன் நாட்டுச் சட்டப்படி வேலை நிறுத்தம் செய்வது சட்டவிரோதம் என்பதால் இந்தியத் தொழிலாளர்கள் உடனடியாக ஸ்டிரைக்கைக் கைவிடுமாறு இந்தியத் தூதரகம், இந்தியத் தொழிலாளர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
இரண்டு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் பஹ்ரைனில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.