உயர்ந்தது பெட்ரோல்-டீசல் விலை
இன்று மத்திய அமைச்சரவை கூடி இதுதொடர்பான முடிவை எடுத்தது.
அந்தா, இந்தா என்று கடந்த 6 மாதமாக பெட்ரோல் விலை உயர்வு குறித்து மத்திய அரசு யோசித்து வந்தது. ஆனால், கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பாலும் தேர்தல்கள் வந்ததாலும் அதை ஒத்தி வைத்து வந்தது.
விலை உயர்வு குறித்து முடிவெடுக்க அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்கள் குழுவை மத்திய அரசு அமைத்தது. ஆனால் அந்தக் குழுவில் இடம் பெற்ற அமைச்சர்களே விலை உயர்வை ஏற்கவில்லை.
பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவதற்குப் பதிலாக அதன் மீதான அநியாய வரிகளை குறைக்க வேண்டும் என இடதுசாரிகளும் பல கூட்டணிக் கட்சிகளும் கூறி வருகின்றன. ஆனால், அதை ப.சிதம்பரம் தலைமையிலான நிதியமைச்சகம் ஏற்கவில்லை.
பெட்ரோல், டீசலுக்கு நாம் கொடுக்கும் விலையில் கிட்டத்தட்ட 40 முதல் 50 சதவீதம் வரியாகப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிகளைக் குறைத்தால் விலை உயர்வே அவசியம் இருக்காது.
இந் நிலையில் மத்திய அமைச்சரவை இன்று கூடியது. இதைத் தொடர்ந்து அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழுக் கூட்டம் நடைபெற்றது.
அதில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது என இறுதி முடிவெடுக்கப்பட்டது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசலுக்கு 1 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சமையல் கேஸ், மண்ணெண்ணெய் விலைகளில் மாற்றம் இல்லை.
மண்ணெணெய் விலை கடந்த 2002ம் ஆண்டிலிருந்து உயர்த்தப்படவில்லை. இப்போதைய பெட்ரோல், டீசல் விலையுயர்வால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மாதம் ரூ. 540 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா, இன்று நள்ளிரவு முதல் விலை உயர்வு அமலுக்கு வருவதாக தெரிவித்தார்.