ஜெ. ஜோதிடரை மிரட்டினாரா சசி உறவினர்?
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஜோதிடரான ரத்தன் பண்டிட் வெற்றிவேல் என்பவரை, சசிகலாவின் உறவினர் மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை மயிலாப்பூர் துவாரகா காலனியைச் சேர்ந்தவர் ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல் (வயது 43). இவர் சென்னை மாநகர காவல் ஆணையர் நாஞ்சில் குமரனிடம் இன்று ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில், நான் ஜோதிடராக இருக்கிறேன். கடந்த 8ம் தேதி சொந்த ஊரான ஈரோடு சென்றிருந்தேன். கடந்த 10-ந்தேதி காலை 10 மணிக்கு எனக்கு ஏற்கனவே அறிமுகமான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர் ராவணன் என்பவர் அங்கு வந்தார்.
சசிகலா என்னை பார்க்க விரும்புவதாகவும், உடனே கோவைக்கு அழைத்து வரும்படி சொன்னதாகவும் கூறினார். அவருடன் காரில் ஏறி சென்றேன். ஆனால் சசிகலா அங்கு இல்லை.
பின்னர் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது என்னிடம் எவ்வளவு சொத்து இருக்கிறது என்று கேட்டார். நான் எனது சொத்து விவரத்தை கூறினேன். உடனே எனது சொத்தை தனது பெயருக்கு எழுதித் தர வேண்டும் என்று கூறினார்.
நான் மறுத்தேன். இதையடுத்து என்னை ஆபாசமாக திட்டினார். எழுதி தராவிட்டால் என்னையும் மனைவி, குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். பின்னர் என்னை கோவையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வந்தார்.
ஒரு ஓட்டலில் தங்க வைத்தார். அங்கிருந்து ஒரு பங்களாவுக்கு அழைத்துச் சென்றார். என்னை அடித்து துன்புறுத்தி 10 பத்திர தாள்களிலும், 10 பச்சை காகிதங்களிலும் கையெழுத்து வாங்கிக் கொண்டார். நான் அவர் கூறியபடி 10ம் தேதியை குறிப்பிட்டு கையெழுத்து போட்டேன்.
என்னை மிரட்டி, அடித்து உதைத்து வெற்று பத்திரத்திலும், தாளிலும் கையெழுத்து வாங்கிய சசிகலாவின் உறவினர் ராவணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் வெற்றிவேல்.
இந்தப் புகார் குறித்து வெற்றிவேல் கூறுகையில், பத்து வருடங்களுக்கு மேலாக ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் நான்தான் ஆஸ்தான ஜோதிடராக இருந்தேன். ஜெயலலிதா 2001ல் முதல்வர் ஆவார் என்று கணித்துக் கூறியிருந்தேன். அதன்படி அவர் முதல்வர் ஆனார்.
பல்வேறு வழக்குகளிலிருந்தும் விடுதலை ஆனார். இடையில் என் மீது பொறாமை கொண்ட சிலர் செய்த சூழ்ச்சியால் என்னை ஒதுக்கி விட்டார் என்றார் வெற்றிவேல்.