திண்டுக்கல் டி.எஸ்.பி பதவிக்கு கடும் போட்டா போட்டி!
திண்டுக்கல்: திண்டுக்கல் டி.எஸ்.பியாக பணிபுரிந்த போஸ் ஏ.டி.எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று திருச்சி மது விலக்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுவிட்டார். ஆனால், இந்தப் பதவியைப் பிடிக்க போட்டா போட்டி நிலவுவதால் இதுவரை அந்த இடத்திற்கு யாரையும் நியமிக்காமல் அரசு மவுனம் காத்து வருகிறது.
போசுக்கு பதிலாக திண்டுக்கல் கியூ பிரிவு டி.எஸ்.பியாக இருந்த சேதுராமனை திண்டுக்கல் நகர டி.எஸ்.பியாக காவல்துறை தலைமையகம் நியமித்தது. ஆனால், இந்தப் பதவியை குறி வைத்து காத்திருந்த சில போலீஸ் அதிகாரிகள் கோட்டை வரை தங்களது செல்வாக்கை பயன்படுத்தி சேதுராமனை பொறுப்பேற்க விடாமல் தடுத்துவிட்டனர்.
திண்டுக்கல் டி.எஸ்.பியாக பொறுப்பேற்க இருந்த நிலையில் சேதுராமன் திடீரென முசிறி டி.எஸ்.பியாக அதிரடியாக பணி மாற்றம் செய்யப்பட்டுவிட்டார்.
இந்த பணியிடத்தை பிடிக்க போலீஸ் அதிகாரிகள் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி போட்டா போட்டி நடத்தி வருவதால் திண்டுக்கல் டி.எஸ்.பி பணியிடம் தொடர்ந்து காலியாக உள்ளது.