சேது திட்டம்: பாலு-அம்பிகா சோனி வாக்குவாதம்; சோனி வெளிநடப்பு
சேது சமுத்திர திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், இதை இழுத்தடித்து வருகிறது மத்திய அரசு.
எந்த மாதிரியான பதிலை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்பது என்பதில் அமைச்சர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. குறிப்பாக சோனியாவுக்கு மிக நெருக்கமான அம்பிகா சோனி, இத் திட்டத்தை நிறைவேற்றுவதறகு தடையாக இருந்து வருகிறார். ராமர் பால பிரச்சனையை வைத்து அரசை பாஜக நெருக்கி வருவதால் ராமர் பாலம் குறித்து அகழ்வாராய்ச்சி நடத்தலாம் என்று கூறிக் கொண்டுள்ளார்.
இதையே உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிக்கலாம் என்று கூறி வருகிறார். ஆனால், அகழ்வாராய்ச்சி என்றெல்லாம் போனால் சேது சமுத்திரத் திட்டமே முடங்கிவிடும் என அமைச்சர் டி.ஆர்.பாலு கருதுகிறார்.
இந் நிலையில் அமைச்சர்கள் குழு டெல்லியில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியது. இதில் பிரணாப் முகர்ஜி, அர்ஜுன் சிங், பரத்வாஜ், கபில் சிபல், டி.ஆர்.பாலு, அம்பிகா சோனி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் சேது சமுத்திர திட்டப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் மனு தாக்கல் செய்வது தொடர்பாக ஆலோசனை நடந்தது. அப்போது மனுவில் இடம் பெற்ற சில கருத்துக்களுக்கு அம்பிகா சோனி ஆட்சேபம் தெரிவித்தார்.
இதனால் எரிச்சலான பாலு, இந்தத் திட்டத்துக்கு அம்பிகா சோனி தடைக்கல்லாக இருப்பதாக கூறியதாகத் தெரிகிறது.
இதையடுத்து பாலுவுக்கும் அம்பிகா சோனிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அறிவியல்துறை அமைச்சர் கபில்சிபலும் தலையிட்டு, சேது சமுத்திர திட்டம் பற்றி அம்பிகா சோனிக்கு எதுவும் தெரியவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இதனால் வாக்குவாதம் மேலும் அதிகமானது. அம்பிகா சோனிக்கு ஆதரவாக யாரும் பேசாத நிலையில் அவர் அந்தக் கூட்டத்திலிருந்து ஆவேசமாக வெளிநடப்பு செய்தார். நேராக அவர் வீட்டுக்கு புறப்பட்டு போய் விட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மூத்த அமைச்சரான பிரணாப் முகர்ஜி, அம்பிகா சோனியை சமாதானப்படுத்துவதற்காக போனில் தொடர்பு கொண்டு பேசினார். ஆனால், அம்பிகா சோனி சமாதானம் அடையவில்லை.
அமைச்சர்கள் கூட்டத்தில் தான் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறிய அவர், கூட்டத்துக்கு வர மறுத்துவிட்டார்.
இந் நிலையில் அக் கூட்டத்தில் நடந்த சம்பவம் பற்றி பிரதமருக்கு அம்பிகா சோனி கடிதம் எழுத உள்ளாராம்.
தமிழர்களின் நூற்றாண்டு கனவான சேது சமுத்திர திட்டத்துக்குத் தான் எத்தனை பிரச்சனை.