குணாலைக் கொன்றது நில புரோக்கர் கும்பல்?
மும்பை: நடிகர் குணாலை நில புரோக்கர் கும்பல் கொன்றிருக்கலாம் என அவரது தந்தை ராஜேந்திர சிங் கூறியுள்ளார்.காதலர் தினம் பட நாயகன் குணால் சிங், மும்பையில் உள்ள தனது வீட்டில் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவரது காதலியும், குணால் நடிக்கவிருந்த புதிய இந்திப் படத்தின் நாயகியுமான லவீனா மட்டும் இருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது தற்கொலை அல்ல, கொலை என்று குணாலின் தந்தை ராஜேந்திர சிங் கூறவே வழக்கு சூடுபிடித்தது.
போலீஸாரும் லவீனாவை துருவித் துருவி விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் மேலும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் ராஜேந்திர சிங். தனது மகனை ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் கொன்றிருக்கலாம் என்பது அவரது சந்தேகம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மகன் குணால், சில நில புரோக்கர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறேன். சில காலத்திற்கு முன்பு நில பேரம் ஒன்றில் அவர் சம்பந்தப்பட்டிருந்தார்.
எனவே அதனால் பாதிக்கப்பட்ட யாரேனும் குணாலைக் கொன்று அவரது சொத்துக்களையும் பறிக்க திட்டமிட்டிருக்கலாம்.
குணால் இறந்த சமயத்தில் லவீனா வீட்டில்தான் இருந்துள்ளார். கொலையை அவர் நேரில் பார்த்திருக்கக் கூடும். அவர் இந்த வழக்கின் முக்கிய சாட்சி ஆவார்.
லவீனான எங்களது குடும்ப நண்பரின் மகள்தான். குணால் நடிக்கவிருந்த படம் மூலம் ஹீரோயினாக அறிமுகவிருந்தார்.
எனது மகன் தற்கொலை செய்து கொண்டிருக்க காரணமே இல்லை. சம்பவத்திற்கு முதல் நாளன்று அவர் தனது மனைவி குழந்தைகளுடன் பேசியுள்ளார். தனது புதுப் படம் குறித்து சந்தோஷமாக விவாதங்களை நடத்தினார் என்று கூறியுள்ளார் ராஜேந்திர சிங்.
குணால் எப்படி இறந்தார் என்பதில் நிலவும் குழப்பம் இதுவரை முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டிருக்கிறது.