பிரெஞ்சு தூதரகம் முன்பு தர்ணா
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு துணைத் தூதரகம் முன்பு குடும்பத்துடன் ஒருவர் நடத்திய தர்ணாவால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி அருகே உள்ள வேலாரம்பேட்டையைச் சேர்ந்தவர் குணாகரன். இவரது மனைவி அமுதா. குணாகரன் இன்று தனது மனைவி, குழந்தைகளோடு புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு துணைத் தூதரகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.
குணாகரன் குடும்பத்தினர் 1996ம் ஆண்டு பிரெஞ்சு குடியுரிமை கோரி மனு செய்தார். அவரது உறவினர்கள் பெரும்பாலானோர் பிரான்ஸில்தான் வசித்து வருகின்றனர்.
2004ம் ஆண்டு இவரது குடியுரிமை தொடர்பான உத்தரவு ஆவணங்கள் பிரெஞ்சு துணைத் தூதரகத்திற்கு வந்தது. ஆனால் அவற்றை துணைத் தூதரகம் குணாகரன் குடும்பத்திடம் தராமல் இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தனது குடும்பத்துடன் இன்று தர்ணாவில் இறங்கினார் குணாகரன்.
பிரான்ஸ் தூதர் இன்று புதுச்சேரிக்கு வருவதாக இருந்ததால், குணாகரன் குடும்பத்தினரை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.