ஷார்ஜாவில் லிப்டில் சிக்கி இந்தியர் பலி
துபாய்: துபாயில் லிப்டில் சிக்கி, நசுங்கி இந்தியர் பலியானார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ரியாஸ் (30) என்பவர் ஷார்ஜாவில் ஒரு கட்டடத்தில் குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்தார். லிப்டுக்குக் கீழே இருந்த குப்பையை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது திடீரென லிப்ட் கீழே இறங்கியது.
இதில் அவர் சிக்கி அந்த இடத்திலேயே பலியானார். ரியாஸ் விசிட் விசாவில் வந்து பணியில் இருந்ததால் அவருக்கு எந்த நஷ்டஈடும் கிடைக்காது என்பது மிக வருத்தமாக தகவல்.
ஷார்ஜா காவல்துறை வேண்டுகோள்:
இதற்கிடையே ஷார்ஜாவில் கடந்த வாரம் 32 வயது இந்தியப் பெண் தனது கணவர் பணிக்குச் சென்றிருந்த போது தாக்கப்பட்டு நகைகள் உள்ளிட்டவை பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்டன. இச்சம்பவம் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதைத் தடுக்க ஷார்ஜா காவல்துறையுடன் ஒத்துழைக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சந்தேகமான நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட முறைகளில் தொடர்பு கொள்ளலாம்.
இணையத்தளம் : http://www.shjpolice.gov.ae/
அஞ்சல் பெட்டி எண் : 29 , ஷார்ஜா, ஐக்கிய அரபு அமீரகம்
தொலைநகல் எண் : 06 538 2013
2007 ஆம் ஆண்டு புள்ளிவிபரப்படி ஷார்ஜாவில் குற்றச் செயல்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சளி மருந்துகளுக்கு எமிரேட்ஸில் தடை:
சளி மற்றும் காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் சில வகை மருந்துகளுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு தடை விதித்துள்ளது.
மூளை மற்றும் இதயத்திற்கு பேராபத்து ஏற்படும் என்பதால் சளி மற்றும் காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் பேனடால் கோல்ட் அண்ட் ப்ளூ (PANADOL COLD&FLU), அட்வில் கோல்ட் அண்ட் சைனஸ் (ADVIL COLD&SINUS), கிளாரினேஸ் (CLARINASE), புளூடாப் (FLUTAB) ஆகிய மருந்துகளுக்கு எமிரேட்ஸ் அரசின் சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது.
இந்த மருந்துகளை யாரும் பயன்படுத்த வேண்டாம் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இவற்றை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.