போதை பொருள் கடத்தியதாக பொய் வழக்கு போட்ட இன்ஸ்பெக்டர் கைது
தூத்துக்குடி: போதை பொருள் கடத்தியதாக பொய் வழக்கில் தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடியை சேர்ந்தவர் ஜான்பால். இவர் ஏற்றுமதி-இறக்குமதி தொழில் செய்து வருகிறார். இவர் அரசு ஓப்பந்தகாரராகவும் இருந்து வருகிறார்.
கடந்த 2006ம் ஆண்டில் இவர் போலி பத்திரங்களை அடமானம் வைத்து வங்கியில் ரூ.1 கோடி கடன் வாங்கினார். இவர் அளித்த பத்திரங்கள் அனைத்தும் போலியானது என வங்கிக்கு தெரிய வந்ததும், வங்கி மேலாளர் தூத்துக்குடி குற்றபிரிவு போலீசில் புகார் செய்தார்.
இதன்பேரில் போலீசார் ஜான்பால் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இதற்கிடையில் ஜான்பால் தன்னிடம் வேலை பார்த்த உதவியாளர் ஈஸ்வர மூர்த்தியிடம் எனக்கு பதில் நீங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டு சிறைக்கு சென்று விடுங்கள், உங்களுக்கு வேண்டிய பண உதவிகளை செய்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால், அதற்கு ஈஸ்வரமூர்த்தி உடன்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த ஜான்பால் போதை பொருள் கடத்தல் வழக்கில் ஈஸ்வர மூர்த்தியை சிக்க வைக்க திட்டமிட்டார்.
இவரது திட்டத்திற்கு கோராம்பள்ளத்தை சேர்ந்த வக்கீல் முத்துகுமார், ரவுடி நல்லகனி, போலீஸ் இன்பார்மர் பாபு, தூத்துக்குடி போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் காந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம், ஏட்டு லூயிஸ செல்வராஜ் ஆகியோர் உடந்தையாக செயல்பட்டனர்.
இவர்களின் திட்டத்தின்படி தபால் மூலம் போதை பொருட்களை ஈஸ்வர மூர்த்திக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அதை அடிப்படையாக கொண்டு போலீசார் அவரை கைது செய்தனர்.
இந் நிலையில் ஈஸ்வர மூர்த்தியின் குடும்பத்தினர், அவர் நிரபராதி என்றும், அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்றும் தமிழக முதல்வர் மற்றும் டிஐஜிக்கு மனு அனுப்பினர்.
இது குறித்து அப்போதைய போதை பொருள் தடுப்பு பிரிவு ஐஜி லெட்சுமி பிரசாத் உத்தரவுபடி ஏடிஎஸ் பி.காமினி, இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் ஆகியோர் இந்த வழக்கை மீண்டும் தீவிரமாக விசாரித்தனர். அதில் ஈஸ்வரமூர்த்தி மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்பது உறுதியானது.
இதையடுத்து ஈஸ்வரமூர்த்தி விடுதலை செய்யப்பட்டார்.
பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றபபட்டது. சிபிசிஐடி ஐஜி தூக்கையாண்டி உத்தரவின் பேரில் நெல்லை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி பொய் வழக்கு போட்ட இன்ஸ்பெக்டர் காந்தியை கைது செய்தனர். அவர் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய வக்கீல் முத்துகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், ஏட்டு லூயிஸ் செல்வராஜ் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.