கைதி மனைவியை கற்பழித்த ஜெயில் வார்டன்கள்-பெண் திடீர் மாயம்
சென்னை: வேலூர் சிறையில் உள்ள கைதியின் மனைவியை ஜெயில் வார்டன்கள் 3 பேர் கற்பழித்துள்ளனர். இந் நிலையில் அவர் காணாமல் போய்விட்டார். அவர் கடத்தப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் கைதி வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆரணியை சேர்ந்த கணேசன் வழக்கு ஒன்றில் கைதாகி 10 ஆண்டு சிறை தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 'ஹேபியஸ் கார்பஸ்' மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், சிறையில் என்னை பார்க்க வந்த எனது மனைவி நதியாவை, ஜெயில் வார்டன்கள் மகேந்திர வர்மன், பாலமுருகன், மூர்த்தி ஆகிய 3 பேரும் கடத்திச் சென்று கற்பழித்து விட்டனர். இதுபற்றி எனது மனைவி என்னிடம் முறையிட்டார்.
இந் நிலையில் கடந்த மாதம் 3ம் தேதி ஜெயிலில் வந்து என்னை பார்த்து விட்டு சென்ற எனது மனைவியைக் காணவில்லை. அவரது கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. என் மனைவியை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கூறியிருந்தார் கணேசன்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் தினகரன், ரகுபதி ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
அதில், இந்தப் புகார் குறித்து மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஆகியோர் விசாரித்து திங்கள்கிழமைக்குள் (18ம் தேதி) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள்,
இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சீருடை அதிகாரிகளின் செயல்பாடுகளில் கரும் புள்ளியை ஏற்படுத்தும் என்றும், எனவே இந்த களங்கத்தை அகற்ற வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர்
இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர். சிறைத்துறை கூடுதல் டிஜிபி சுப்பிரமணியம் வேலூர் சிறைக்குச் சென்று விசாரணை நடத்தினார்.
மேலும் பெண்கள் சிறையின் கண்காணிப்பாளர் ராஜ செளவுந்தரியும் இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறார். குற்றம் சாட்டப்பட்ட ஜெயில் வார்டன்கள் 3 பேரிடமும் விசாரணை நடக்கிறது.