புதிய சட்டமன்ற கட்டத்தைக் கட்டும் ஜெர்மன் நிறுவனம்
இது தொடர்பான ஒப்பந்தத்தில் தமிழக அரசின் பொதுப்பணித்துறையும் ஜி.எம்.பி. இண்டர்நேஷனல் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன.
சட்டமன்றத்துடன் பிரமாண்டமான புதிய தலைமைச் செயலக வளாகமும் கடப்படவுள்ளது. சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள சில கட்டடங்களை இடித்து விட்டு இந்த வளாகமும் சட்டசபையும் அமையவுள்ளன.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
முதல்வர் கருணாநிதி கடந்த ஆண்டு மே மாதம் சட்டப் பேரவையில் அறிவித்தபடி சட்டமன்றப் பேரவைக்கான புதிய கட்டிடத்தை தோராயமாக ரூ. 200 கோடி மதிப்பீட்டில் கலை நயத்துடனும், வசதிகளுடனும் கட்டுவதற்கு அரசு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தப் பணிக்காக ஜெர்மனியைச் சேர்ந்த ஜி.எம்.பி. இண்டர்நேஷனல் அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டிடம் 75,000 சதுர மீட்டரில் அமைய உள்ளது. 6 மாத காலத்துக்குள் கட்டிடம் கட்டும் பணி தொடங்கவுள்ளது.
பொதுப்பணித்துறை சார்பில் கண்காணிப்புப் பொறியாளர் டி.அன்பழகனும் ஜி.எம்.பி. இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் அதன் முதன்மை செயல் அலுவலரும் கட்டிடக்கலை பங்குதாரருமான ஹுபர்ட் நியன்காப் ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.