அரசு விழாவை புறக்கணித்த திமுக எம்எல்ஏ
செங்கோட்டை: அரசு பேருந்து தொடக்க விழாவை ஆளும் திமுக எம்எம்ஏவே புறக்கணித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
செங்கோட்டையிலிருந்து-பெங்களூருக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நவீன குளிர்சாதன சொகுசு பேருந்து தொடக்க விழா நேற்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இவ்விழாவில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் வி.கருப்பசாமி பாண்டியன் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பேருந்தை தொடக்கி வைப்பவர் நகர் மன்ற தலைவர் முகம்மது ரகீம் என்று அழைப்பிதழில் போடப்பட்டிருந்ததால் குற்றாலம் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த எம்எல்ஏ தொடக்க விழாவிற்கு வராமல் நேராக தேன்பொத்தை ஊராட்சி மன்ற பகுதியில் நடைபெறும் உள்ளாட்சி இடைத் தேர்தல் பிரசாரத்திற்கு சென்று விட்டார்.
எம்எல்ஏவிடம் மனு கொடுக்க காத்திருந்த பலர் அவர் வராததால் ஏமாற்றமடைந்தனர். நகராட்சித் தலைவருக்கும், கருப்பசாமி பாண்டியனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள விரிசல்தான் இந்த புறக்கணிப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.