இங்கிலாந்தில் சிகரெட் வாங்க பெர்மிட்!
இங்கிலாந்து அரசின் சுகாதாரத் துறைக்கு ஆலோசனை சொல்லும் ஹெல்த் இங்கிலாந்து என்ற அமைப்பு இப்படி ஒரு பரிந்துரையை சுகாதாரத் துறைக்கு செய்துள்ளது. அதன்படி சிகரெட் வாங்க விரும்புவோர், சுகாதாரத் துறையிடம் 10 பவுண்டு பணம் கட்டி பெர்மிட் வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த பெர்மிட்டைக் காட்டினால்தான் சிகரெட் கிடைக்குமாம்.
பெர்மிட் இல்லாதவர்களுக்கு கடைக்காரர்கள் சிகெரட் தர மாட்டார்கள். இதன் மூலம் சிகரெட் பழக்கத்தை மக்கள் கைவிட ஏதுவாக இருக்கும் என்பது ஹெல்த் இங்கிலாந்தின் எண்ணம்.
இதுகுறித்து ஹெல்த் இங்கிலாந்து அமைப்பின் தலைவர் ஜூலியன் லி கிராண்ட் கூறுகையில், இந்த பெர்மிட் முறையால் சிகெரட் புகைப்போரின் எண்ணிக்கை குறையக் கூடும்.
மேலும் இதன் மூலம் வசூலாகும் பணம் தேசிய சுகாதாரத் திட்டத்துக்கும் பயன்படும். இப்படி இரட்டை லாபங்கள் இதில் உள்ளன என்றார். லி கிராண்ட், முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் முன்னாள் ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் புகைபிடிப்போர் உரிமைக் குழு என்ற அமைப்பு இந்த பெர்மிட் முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது புகை பிடிப்போரின் உரிமையை பறிக்கும் செயல் என்று அது கோபப் புகையைக் கக்கியுள்ளது.
ஏற்கனவே சிகரெட் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிகரெட் வாங்க பெர்மிட் என்றால் எப்படி என்று அந்த அமைப்பினர் ஆதங்கப்படுகின்றனர்.
ஆனால் இப்படி பெர்மிட் முறையைக் கொண்டு வந்தால்தான் புகை பிடிப்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்பது லி கிராண்ட்டின் கருத்து.
அவர் கூறுகையில், 70 சதவீத புகை பிடிப்பாளர்கள் சிகரெட் பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பெர்மிட் முறை, சீக்கிரமாகவே இதை விட்டு விட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தும். எனவே இந்த பெர்மிட் முறையால் நல்ல பலனே உண்டாகும் என்கிறார்.
இந்த பெர்மிட் யோசனை குறித்து இங்கிலாந்து சுகாதாரத் துறை யோசித்துக் கொண்டிருக்கிறதாம்.
நம்ம ஊரிலும் கூட இப்படி கொண்டு வரலாமே!