ராமேஸ்வரம் கோவிலுக்குள் சென்ற எம்பி ஆரூண்-பாஜக கண்டனம்
ராமேஸ்வரம்: ஆகம விதிகளை மீறி ராமேஸ்வரம் கோவிலுக்குள் எம்.பியான ஆரூண் நுழைந்துவிட்டதாகக் கூறி பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் ஆகியவை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.
மத்திய உள்துறை இணையமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் ராமேஸ்வரம் வந்தார். கடற்படை அதிகாரிகளை சந்தித்த அவர் கடலோர பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் ராமநாத சுவாமி கோவிலுக்கு வந்த அவரை கோவில் அதிகாரிகள் வரவேற்றனர். அவருடன் பெரியகுளம் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஆரூணும் சென்றிருந்தார்.
இந் நிலையில் இதை பாஜகவும் இந்து முன்னணியும் பிரச்சனையாக்கியுள்ளன.
ஜெய்ஸ்வால் தரிசனம் செய்த பகுதியில் கோவில் ஆகம விதிப்படி இந்துக்களை தவிர வேறு மதத்தினர் யாரும் செல்லக்கூடாது. ஆனால் அதனை மீறி ஆரூண் எம்.பி. சென்றுள்ளார் என்று கூறி இந்த அமைப்புகள் போராட்டம் நடத்தின.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளிதரன், இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் கோவில் இணை ஆணையர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு அதிகாரிகள் யாரும் இல்லாததால் அங்கேயே சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் கோவில் நிர்வாகத்திடம் கொடுத்த மனுவி்ல், விதிகளை மீறி ஆரூண் எம்பியை அதிகாரிகள் எப்படி அனுமதித்தார்கள். இது தொடர்பாக ஆரூண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கோரியுள்ளனர்.
இது தொடர்பாக ஆரூண் கூறுகையில்,
நான் திருப்பதி வெங்கடாஜலபதி, பழனி முருகன் கோவில்கள் உள்பட பல்வேறு கோவில்களுக்கு சென்றுள்ளேன். வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது கோவில் கும்பாபிஷேக விழாவுக்கும் தலைமை தாங்கியுள்ளேன்.
மக்கள் பிரதிநிதியாகிய நான் கோவிலுக்குள் சென்று வர உரிமை உண்டு. பெரியகுளம் தொகுதியில் பெரும்பாலான இந்துக்களின் ஆதரவுடன் நான் எம்.பி. ஆனேன். ஏராளமான இந்துக்கள் நாகூர் தர்காவுக்கு வந்து வழிபடுகிறார்கள்.
முஸ்லீம் என்ற முறையில் நான் அதை குறை கூறவில்லை. என்னால் கோவிலின் புனிதம் கெட்டதாக நினைத்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
ஏற்கனவே ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அசன் அலி ராமேஸ்வரம் கோவிலுக்குள் நுழைந்து சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.