கட்சி தேர்தல்-திமுகவினர் அடிதடி, போலீஸ் தடியடி!
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் திமுக கட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலின்போது இரு கோஷ்டிகள் இடையே பயங்கர அடிதடி கலாட்டா நடந்தது. இதையடுத்து திமுகவினரை போலீஸ் தடியடி நடத்தி கலைத்தனர்.
மாநிலம் முழுவதும் திமுகவில் உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் நகரம் 33 வார்டுக்ளுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.
இந்த தேர்தலுக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் காயம்பு, பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் திமுக நகரச் செயலாளர் ரத்தினம் தலைமையில் ஒரு கோஷ்டியினர் 33 வார்டுகளுக்கும் வேட்பு மனு தாக்கல் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது பொதுக்குழு உறுப்பினர் அபுதாஹீர், முன்னாள் கவுன்சிலர் அய்யனார், சுபாஷ்சந்திரபோஸ், சேதுராஜன், தொ.மு.ச. மாவட்டச் செயலாளர் மலைக்கண்ணு, ஆகியோர் தலைமையில் 33 வார்டுகளுக்கும் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றனர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு இரு கோஷ்டியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். அப்போது பாதுகாப்புக்கு நின்ற போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்தனர்.
ஆனால் இரு தரப்பும் போலீசாரை அலட்சியப்படுத்திவிட்டு மீண்டும் மோதலில் ஈடுபட்டனர். இரு தரப்பும் அடித்துக் கொண்டு நடு ரோட்டில் உருண்டனர். இதைப் பார்த்து மக்கள் அதிர்ந்து போய் ஓடினர்.
இதையடுத்து போலீசார் திமுகவினர் மீது தடியடி நடத்தினர். இதை எதிர்பார்க்காத திமுகவினர் திகைத்துப்போய் ஆளுக்கு ஒரு பக்கமாக கலைந்து ஓடினர்.
இந்த சண்டை-தடியடியால் அந்த இடமே போர்களம் போல காட்சியளித்து.