இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 40 மூடை பீடிக் கட்டுகள் பறிமுதல்
ராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 40 மூடை பீடிகளை போலீஸார் பறிமதுல் செய்து இதுதொடர்பாக 3 பேரைக் கைது செய்தனர்.
ராமநாதபுரம் அருகே நாச்சியூரணி என்ற கடலோரக் கிராமத்தில் பீடிக் கட்டுக்களை சிலர் இலங்கைக்கு கடத்துவதாக கியூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து கியூ பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாச்சியூரணி கடல் பகுதியில் சிலர் பைபர் கிளாஸ் படகில் சில மூடைகளை ஏற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து விரைந்து வந்து அவற்றைப் பறிமுதல் செய்தனர்.
அதில் பீடிக் கட்டுக்கள் இருந்தன. மொத்தம் 40 மூடை பீடிக் கட்டுக்கள் இருந்தன. இவற்றை இலங்கைக்கு கடத்துவதற்காக ஏற்றியதாக அங்கிருந்த 3 பேரும் கூறினர். இதையடுத்து மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மருதுபாண்டி, நாச்சியூரணியைச் சேர்ந்த கருப்பையா, அய்யாச்சாமி ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
படகு உரிமையாளர் தப்பி ஓடி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.