24ம் தேதி முதல் பழனியில் மீண்டும் ரோப் கார் சேவை
பழனி: பழனி மலைக் கோவிலில் நடந்த விபத்தைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோப் கார் சேவை வருகிற 24ம் தேதி முதல் மீண்டும் இயக்கத்திற்கு வருகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் கடந்த அதிமுக ஆட்சியில் ரோப் கார் வசதி செய்யப்பட்டது. பக்தர்களிடையே இந்த ரோப் காருக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் வின்ச் சேவையோடு ரோப் கார் சேவையும் வெற்றிகரமாக இயங்கி வந்தது.
முதலில் 20 பெட்டிகள் வரை இயக்கப் பட்டன. ஆனால் அவ்வப்போது ஏற்பட்ட சிறுசிறு விபத்துக்களால் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி அந்தரத்தில் சென்ற ரோப்கார் திடீரென்று அறுந்து விழுந்தது. இதில் 4 பக்தர்கள் உயிரிழந்தனர். இதனால் ரோப்கார் இயக்கம் நிறுத்தப்பட்டது.
இதுபோன்ற விபத்துக்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டன. இதன் அடிப்படையில் அரசிடம் அறிக்ைக சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்படி மேல்தளத்தில் இருந்து 350 மீட்டர் இடை வெளியில் அமைக்கப்பட்டிருந்த கீழ்தள டவர் அகற்றப்பட்டது. அதற்கு பதிலாக 20 மீட்டர் இடைவெளியில் புதிய டவர் அமைக்கப்பட்டது.
50 மீட்டர் இடைவெளியிலான தூரத்தில் இயக்கப்பட்ட ரோப்கார் வரும் காலங்களில் 2 மீட்டர் இடைவெளி தூரத்தில் இயக்கப்படும். கீழ்தளத்தில் இருந்து கோவிலுக்கு 2 நிமிடங்களில் செல்லும் அளவுக்கு இந்த ரோப்கார் இயக்கப்படும்.
சுமார் 350 கிலோ எடையுடன் 2 பெட்டிகள் மட்டும் வருகிற 24-ந்தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.