ஜோதிடர் கடத்தல்: முன்ஜாமீன் கோரும் சசி உறவினர்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் முன்னாள் ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், முன் ஜாமீன் கோரி சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் சசிகலாவின் உறவினரான ராவணன்.
சசிகலாவின் உறவினர் ராவணன். இவர் கோவையில் வசித்து வருகிறார். கடந்த வாரம் ராவணன் மீது ரத்தன் பண்டிட் வெற்றிவேல் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் ஒன்றைக் கொடுத்தார்.
அதில் சசிகலா அழைப்பதாக கூறி தன்னை ராவணன் அழைத்துச் சென்றதாகவும், பின்னர் தன்னை கொன்று விடுவதாக மிரட்டியதாகவும், தனது கோடிக்கணக்கான சொத்துக்களையும் தனது பெயரில் மாற்றித் தருமாறு கூறியதாகவும், ராவணன் கூறியிருந்தார்.
இந்தப் புகார் மனு தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பேரில் தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந் நிலையில், சென்னை முதலாவது செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராவணன் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், நான் யாரையும் கடத்தவில்லை. இது உள்நோக்கத்துடன் கூடிய பொய்யான புகார் என்று கூறியுள்ளார் ராவணன்.
இந்த மனு நீதிபதி அருணா ஜெகதீசன் முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதி மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.