50 வருடங்களாக தனிமையில் தவிக்கும் மன்னரின் மனைவி!
காத்மாண்டு: மறைந்த நேபாள மன்னர் திரிபுவனின் அந்தப்புரத்து பெண்ணான, 91 வயது பெண்மணி கடந்த 50 ஆண்டுகளாக ராணுவப் பாதுகாப்புடன், வெளியுலக தொடர்பே இல்லாமல் தனிமையில் வசித்து வருகிறார்.
பாட்டி ராணி என்ற பட்டப் பெயருடன் வசித்து வரும் இந்தப் பெண்மணி, நேபாளத்தின் தமாங் என்ற தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவராம். இவரது பெயர் யாருக்கும் தெரியவில்லை. நேபாள ராஜ வம்சத்துக்குச் சொந்தமான நாராயண்ஹித்யா என்ற அரண்மனையின் ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு சிறிய வீட்டில் இந்தப் பாட்டி வசித்து வருகிறார்.
இவர் மறைந்த மன்னர் திரிபுவனின் அந்தப்புரத்து அழகிகளில் ஒருவராக இருந்தவர். இவர் இருக்கும் வீட்டுக்கு ராணுவப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. யாரும் இவரை சந்திக்க அனுமதி கிடையாது. அவரும் வெளியே போக அனுமதி கிடையாதாம்.
இதே அரண்மனை வளாகத்தில்தான் திரிபுவனின் பேரனான மன்னர் ஞானேந்திரா தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்தப் பாட்டி இருக்கும் வீடு எந்தவித வசதியும் இல்லாமல் படு மோசமான நிலையில் இருக்கிறதாம். மன்னர் திரிபுவன் 1955ம் ஆண்டு மரணமடைந்தார். அதன் பின்னர் இந்த வீட்டுக்கு வந்து விட்டாராம் இந்தப் பாட்டி.
இவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் ராஜ குடும்பத்தினர் இந்தப் பாட்டியை தங்களில் ஒருவராக அங்கீகரிக்காமல் ஓரம் கட்டி விட்டனர். இருப்பினும் பாட்டி ராணி என்று பொருள்படும் ஜிஜியு முமஜ்யு ராணிசாஹேப் என்ற பட்டத்தை மட்டும் கொடுத்துள்ளனர். அதேசமயம், அரச குடும்பத்தினருக்கு வழங்கப்படும் ஸ்ரீபாஞ்ச் என்ற பட்டத்தை கொடுக்கவில்லை.
இந்த பாட்டியை இதுவரை யாரும் பார்த்ததில்லையாம். வீட்டு அருகே போக அனுமதி இல்லை என்பதால் இவரது முகம் யாருக்கும் தெரியாதாம்.