தேசிய விருது: பரிசு தொகை கிடுகிடு உயர்வு
டெல்லி: தேசிய திரைப்பட விருதுகளுக்குத் தரப்படும் பரிசுத் தொகையை ஐந்து மடங்காக மத்திய அரசு அதிகரித்துள்ளது. தாதா சாஹேப் பால்கே விருதுக்கான பரிசுத் தொகை ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஆண்டுதோறும் தேசிய அளவில் சிறந்த திரைப்படக் கலைஞர்கள், திரைப்படங்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கிறது. இந்த விருதுகளுக்கான பரிசுத் தொகை மிகவும் குறைவாக இருப்பதாக மத்திய அரசுக்கு எடுத்துக் கூறப்பட்டது. இதையடுத்து தற்போது பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி சிறந்த பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு வழங்கப்படும் ஸ்வர்ண கமல் (தங்கத் தாமரை) விருதுக்குரிய பரிசுத் தொகை ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
திரைத் துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் தாதா சாஹேப் பால்கே விருதுக்கான பரிசுத் தொகை ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, சிறந்த நடிகர், நடிகை, சிறந்த பாப்புலர் படம், தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் படம், சிறந்த இயக்குநர், சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த பின்னணிப் பாடகர், பாடகி உள்ளிட்ட அனைத்து விருதுகளுக்குமான பரிசுத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் இந்த பரிசுத் தொகை உயர்வு அமலுக்கு வருகிறது. 2006ம் ஆண்டுக்கான தேசிய விருதுகளைப் பெற்றவர்களுக்கும் இந்த உயர்த்தப்பட்ட பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1954ம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.