விமானத்தில் கோளாறு- வீடு திரும்பினார் ஜெ.
சென்னை: நாகை மாவட்டம் திருக்கடையூர் கோவிலுக்கு வழிபாடு செய்ய தனி விமானத்தில் புறப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, விமானம் பாதியிலேயே கோளாறு காரணமாக சென்னை திரும்பியதால், தனது பயணத்தை ரத்து செய்து விட்டு வீடு திரும்பினார்.
தனது 60வது பிறந்த நாளையொட்டி நாகை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள கோவிலில் சிறப்பு வழிபாடு செய்ய திட்டமிட்ட ஜெயலலிதா இன்று முற்பகல் 11 மணியளவில் தனி சிறிய ரக விமானத்தில் தஞ்சைக்குப் புறப்பட்டார்.
அவருடன் தோழி சசிகலாவும் சென்றார். விமானத்தில் இரு பைலட்டுகள் உள்பட 8 பேர் இருந்தனர்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்திற்குத் திரும்பியது.
விமானத்தில் சிறிய அளவிலான கோளாறே ஏற்பட்டிருப்பதாகவும், சில நிமிடங்களில் அது சரி செய்யப்பட்டு விடும் என பைலட்டுகள் ஜெயலலிதாவிடம் தெரிவித்தனர்.
ஆனால் சென்டிமெண்ட் பார்க்கும் ஜெயலலிதா தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு வீடு திரும்பிவிட்டார்.