நவாசுடன் கூட்டணி அரசு-முஷாரப்பை நீக்கவும் பெனாசிர் கட்சி சம்மதம்
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி பலம் கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சியாக பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி உருவெடுத்துள்ளது. 2வது இடத்தை நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் பெற்றுள்ளது. 3வது இடத்தில் முஷாரப் ஆதரவு பாகிஸ்தான் முஸ்லீம் லீஸ் (க்யூ) உள்ளது. மதவாத கட்சிகளுக்கு இத்தேர்தலில் பெருத்த அடி விழுந்துள்ளது.
பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு 87 சீட்கள் கிடைத்தன. நவாஸ் கட்சிக்கு 66 இடங்கள் கிடைத்துள்ளன.
கூட்டணி ஆட்சி:
தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து நவாஸ் கட்சியும், பெனாசிர் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளன. இதுதொர்பாக இரு கட்சித் தலைவர்களும் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
கூட்டணி குறித்து நவாஸ் ஷெரீப் செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைவரையும் அழைத்துப் பேசவுள்ளேன். பாகிஸ்தானை சர்வாதிகாரத்தின் பிடியிலிருந்து நிரந்தரமாக மீட்பது குறித்து விவாதிக்கவுள்ளேன்.
ஜனநாயக சக்திகளுடன் இணைந்து செயல்படுவோம். அவர்களின் ஒத்துழைப்பையும் பெற முயல்வோம். ஜனநாயகத்தை காக்க அனைவரும் ஒரே பிளாட்பாரத்தில் நிற்க வேண்டியது அவசியமாகும்.
வியாழக்கிழமை நான் சர்தாரியை சந்திக்கவுள்ளேன். அவரிடம் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் அப்பொறுப்பில் அமர்த்த வேண்டியதன் அவசியத்ைத எடுத்துரைத்துள்ளேன். அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
நீதித்துறை முதலில் சுதந்திரமடைய வேண்டும். அதுதான் பாகிஸ்தானின் உண்மையான சுதந்திரமாக இருக்க முடியும்.
முஷாரப் எடுத்த எந்த முடிவுகளையும் எங்களது கட்சி ஆதரித்தததில்லை. ஏற்றுக் கொண்டதில்லை. எனவே அவசர நிலைக்குப் பிறகு முஷாரப் அரசு பிறப்பித்த அனைத்து உத்தரவுகளும், நடவடிக்கைளும் திரும்பப் பெறப்படும்.
மக்கள் விரும்பினால்தான் நான் பதவி விலகுவேன் என்று கூறி வந்தார் முஷாரப். தேர்தல் முடிவு அவருக்குப் புரியுமா, இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் இப்போது மக்கள் விரும்பி விட்டார்கள். எனவே அவர் போய்த்தான் ஆக வேண்டும் என்றார் நவாஸ்.
நம்பிக்கை இல்லாத் தீர்மானம்:
ஆட்சியைப் பிடித்தால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து முஷாரப்பை பதவியிலிருந்து அகற்றுவோம் என ஏற்கனவே நவாஸ் ஷெரீப் கூறியிருந்தார்.
முஷாரப் பதவியில் நீடிக்க அனுமதிக்கப்பட மாட்டார் என்றும் ஷெரீப் கூறியிருந்தார். தற்போது நவாஸ் மற்றும் பெனாசிர் கட்சிகளுக்கு போதுமான பலம் நாடாளுமன்றத்தில் கிடைத்து விட்டது. எனவே திட்டமிட்டபடி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மூலம் முஷாரப்பை பதவி நீக்கம் செய்ய நவாஸ் கட்சி ஆர்வமாக உள்ளது.
நவாஸ் ஷெரீப்பின் முடிவுக்கு ஆசிப் அலி சர்தாரியும் ஒப்புதல் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. ஆட்சி அமைத்தவுடன் முதல் வேலையாக முஷாரப்பை நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மூலம் பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இரு கட்சிகளின் தலைவர்களும் நம்பிக்கையுடன் உள்ளனர்.
ஒத்துழைப்பேன் - முஷாரப்:
இதற்கிடையே, புதிதாக வரும் பிரதமருடன் அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு கொடுத்து செயல்படுவேன் என்று அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க எம்.பிக்கள் குழுவுடன் அவர் நேற்று பேசினார். அப்போது, பிரதமரின் அதிகாரங்களை மதித்து நான் செயல்படப் போகிறேன். அடுத்து வரும் அரசு ஒற்றுமையுடன் செயல்படும் என நம்புகிறேன்.
தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழ்நிலை நேர்மறையான நம்பிக்கைகளுக்கு வித்திட்டுள்ளது.
நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டும், எதிர்காலத்ைதக் கருத்தில் கொண்டும் அனைத்துக் கட்சிகளும் செயல்பட வேண்டும்.
ஜனநாயகத்தை கட்டிக் காக்க நான் உறுதி பூண்டுள்ளேன். அதன் வெளிப்பாடாகவே, நேர்மையான முறையில், நியாயமான முறையில், வன்முறை எதுவும் இல்லாமல் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றார் முஷாரப்.
மேலும், அதிபர் பதவியிலிருந்து தான் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும் முஷாரப் தெளிவுபடுத்தியுள்ளேன். அனைவருடனும் ஒத்துழைத்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் யார்?:
அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி பாகிஸ்தான் மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட முஷாரப் தடை விதித்து விட்டார். அவர் போட்டியிட்டு வென்றிருந்தால் நிச்சயம் அவர்தான் அடுத்த பிரதமராக பதவியேற்றிருப்பார்.
ஆனால் இப்போது நவாஸ் ஷெரீப் பிரதமர் போட்டியில் இல்லை. தேர்தலுக்கு முன்பே பாகிஸ்தான் மக்கள் கட்சியும், நவாஸ் ஷெரீப் கட்சியும் ஒப்பந்தம் செய்து கொண்டன.
அதன்படி, பெனாசிர் கட்சிக்கு பிரதமர் பதவியை விட்டுத் தர நவாஸ் ஷெரீப் ஒத்துக் கொண்டார். அதன் அடிப்படையில் இப்போது பெனாசிர் கட்சியைச் சேர்ந்தவருக்கே பிரதமர் பதவி கிடைக்கவுள்ளது.
பெனாசிர் கட்சியின் பிரதமர் வேட்பாளராக மக்தூம் அமீன் பாஹிம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார். அவர்தான் அடுத்த பிரதமராக வேண்டும் என பெனாசிர் பூட்டோவே தனது உயிலில் எழுதி வைத்துள்ளார்.
எனவே பாஹிம்தான் அடுத்த பிரதமராக வரக் கூடும் என்று தெரிகிறது. நவாஸ் ஷெரீப்பும், ஆசிப் அலி சர்தாரியும் நாளை பேசும்போது கூட்டணி ஆட்சி குறித்த அனைத்து அம்சங்களையும் பேசி முடிவு செய்வார்கள் என்று தெரிகிறது.
ஷெரீப்புடன் சேர வேண்டாம்: ஜர்தாரிக்கு முஷாரப்:
இதற்கிடையே நவாஸ் ஷெரீப்புடன் சேர வேண்டாம் என பெனாசிரின் கணவர் ஜர்தாரிக்கு முஷாரப் கோரிக்கை விடுத்துள்ளார்.
இருவரும் சேர்ந்தால் தனது நிலைமை மோசமாகிவிடும் என்பதால் இந்தக் கோரிக்கையை முஷாரப் விடுத்துள்ளார்.