தலித் கிருஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு கூடாது-பாஜக
விஜயவாடா: பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்துள்ள சச்சார் கமிட்டி அறிக்கையை வங்கக் கடலில் தூக்கி எறிவோம் என பாஜக மூத்த தலைவர் வெங்கைய நாயுடு கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நிருபர்களிடம் பேசிய நாயுடு,
சமீபத்தில் சச்சார் கமிட்டி மத்திய அரசிடம் அளித்த அறிக்கையில் தலித் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தலித் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை பாஜக ஆதரிக்காது. அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால் மத மாற்றத்தை ஊக்குவிப்பதாக அமைந்துவிடும்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் சச்சார் கமிட்டியின் இந்த அறிக்கையை வங்கக் கடலில் தூக்கி எறிவோம்.
இதே போல் மத மாற்றத்திற்காக வெளிநாட்டில் இருந்து வரும் நிதியை தடை செய்வோம். மத மாற்றத்தை தடுக்க கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும்.
தீவிரவாதத்தை தடுக்கத் தான் பொடா சட்டம் கொண்டு வரப்பட்டது. அச்சட்டத்தை வாபஸ் பெற்றது தவறு. அதை மீண்டும் கொண்டு வரவேண்டும்.
தெலுங்கானா தனி மாநிலத்திற்கு பாஜக முழு ஆதரவு அளிக்கும். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும்.
காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. எனவே இன்னும் 6 மாதத்திற்குள் பாராளுமன்றத்திற்கு தேர்தல் வருவது உறுதி.
பாஜக தொண்டர்கள் இப்போதே தேர்தலுக்கு தயாராகலாம். ஒற்றுமையுடன் செயல்பட்டால் எளிதாக ஆட்சியை பிடித்து விடலாம் என்றார்.