சிறையில் போட்டாலும் என் கொள்கை மாறாது-திருமாவளவன்
திட்டக்குடி: என்னை சிறை வைக்க வேண்டும் என்கிறார் ஜெயலலிதா. வாழ்க்கை முழுவதும் சிறையில் இருந்தால் கூட எனது கொள்கை நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மாட்டேன் என விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
திட்டக்குடியில் நடந்த அம்பேத்கார் விழாவில் கலந்து கொண்ட திருமாவளவன் பேசியதாவது:
நாட்டை தலைநிமிற வைத்தவர் அம்பேத்கார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தம்மை அர்ப்பணித்து கொண்ட ஒரே தலைவர் அம்பேத்கார். இந்தியாவில் வெவ்வேறு தலைவர்கள் தோன்றினார்கள். போராட்டங்கள் நடத்தினர். அவர்களுக்கெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகள் புரியவில்லை.
கால் வயிற்றுக்கு பாடுபடும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை உயரவில்லை. அம்பேத்கார் தான் இதை வெளியே கொண்டு வந்தார். மண்ணின் மைந்தர்கள் என்பதை புரிய வைத்தார். அம்பேத்காரின் பேச்சு எழுத்து மட்டும் தான் அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
இன்று அரசியல் நடத்தும் தலைவர்களுக்கு அம்பேத்கார் பற்றி புரியவில்லை. திரைப்படத்தில் பாய்ந்து பாய்ந்து அடிப்பவர்களால் தமிழ்நாட்டை வழிநடத்த முடியுமா?. அம்பேத்கார் ஒரு பண்பாட்டு புரட்சியையே செய்தவர். ஒட்டுமொத்த தமிழர்களுக்காக பாடுபடும் இயக்கம் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் தான்.
சினிமா நடிகர்கள் அரசாள ஆசைப்படலாம். தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் அவர்களிடம் ஏமாறக் கூடாது.
என்னை சிறை வைக்க வேண்டும் என்கிறார் ஜெயலலிதா. வாழ்க்கை முழுவதும் சிறையில் இருந்தால் கூட எனது கொள்கை நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மாட்டேன். உலக தமிழர்களுக்கு தார்மீக ஆதரவு தொடரும் என்றார் திருமாவளவன்.
விழாவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தனர்.