நிலையங்கள் மாறிய ரயில்கள்-ஓடித் தவித்த பயணிகள்
சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் நிறுத்தத்தில் சிக்னல்களை மாற்றும் பணி நடந்து வருகிறது. வரும் 24ம் தேதி வரை இந்தப் பணிகள் நடக்கவுள்ளன. இதனால் சென்ட்ரல் மற்றும் மூர் மார்க்கெட் ரயில் நிலையங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பல ரயில்கள் எழும்பூருக்கும், சில ரயில்கள் கடற்கரை ரயில் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளன.
எழும்பூரிலிருந்து 12 மெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களும், 25 வாராந்திர ரயில்களும் மாற்றப்பட்டு இயக்கப்படுகின்றன. இதுதவிர கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து 20 மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து பத்திரிகைகளுக்கு தெரிவித்ததோடு ரயில்வே தனது கடமையை முடித்துக் கொண்டது. ஆனால் சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்களில் இதுதொடர்பாக எந்த அறிவிப்பும் வைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பெரும் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர்.
இந் நிலையில் நேற்று காலை சென்டிரல் புறநகர் ரயில் நிலையத்திலிருந்து சூலூர்பேட்டைக்குச் செல்லும் மின்சார ரயில் 12வது பிளாட்பாரத்தில் புறப்படத் தயாராக இருந்தது. ஆனால் அதே நேரத்தில் அதே பிளாட்பாரத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் ரயிலும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இதனால் இரு ரயில்களும் மோதும் அபாயம் ஏற்பட்டது.
திருவள்ளூர் ரயிலின் என்ஜின் டிரைவர் சுதாரிப்புடன் செயல்பட்டதால் ரயில் நிறுத்தப்பட்டு வேறு பிளாட்பாரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந் நிலையில் ஆவடியிலிருந்து வரும் மின்சார ரயில்கள், , கும்மிடிப்பூண்டியில் இருந்து வரும் மின்சார ரயில்கள் எல்லாம் பேசின்பிரிட்ஜ் வரை இயக்கப்பட்டன.
அதே நேரத்தில் கடற்கரையில் இருந்து ஆவடி, கும்மிடிப்பூண்டிக்கு ரயில்கள் இயக்கப்பட்டன. இதன் காரணமாக பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.
சென்ட்ரலில் இருந்து பெங்களூர், விஜயவாடா போன்ற இடங்களுக்கு புறப்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் எழும்பூரில் இருந்து புறப்படுவது தெரியாததால் பல பயணிகள் கடைசி நேரத்தில் அடித்துப் பிடித்து எழும்பூருக்கு ஓடினர்.
பெங்களூர் எக்ஸ்பிரஸ், கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் விஜயவாடா பினாங்கினி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் எழும்பூரில் இருந்து புறப்பட்டு சென்றன. இந்த ரெயில்களில் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் குறைவாகவே இருந்தது. காரணம் ரயில் எங்கிருந்து புறப்படுகிறது என்பது தெரியாமல் பயணிகள் குழம்பி ரயிலை விட்டதுதான்.
ரயில்கள் செல்லும் நேரம், எங்கிருந்து புறப்படுகிறது என்பதை தெளிவாக குறிப்பிடும் அறிவிப்புப் பலகைகளை ரயில்வே நிர்வாகம் வைத்தால் என்ன குறைந்து போய் விடும் என பயணிகள் குமுறுகின்றனர்.