தலித் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை-நிபந்தனை ரத்து
முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று இந்த நிபந்தனை வாபஸ் பெறப்பட்டதாக மத்திய அமைச்சர் மீரா குமார் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மத்திய அரசின் சமூக நலத்துறை ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, பிளஸ்டூவில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றால்தான், தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு மேல் படிப்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் மாணவர்கள் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினர்.
இதையடுத்து மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் பழைய விதிமுறைப்படியே கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி தெளிவுபடுத்தினார். அத்தோடு நில்லாமல், பழைய விதிமுறைப்படியே கல்வி உதவித் தொகை வழங்கப்பட வேண்டும், புதிய நிபந்தனையைக் கைவிட வேண்டும் என்று கோரி சமூக நலத்துறை அமைச்சர் மீரா குமாருக்கு கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் நேற்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தப் புதிய நிபந்தனையைக் கைவிட தீர்மானிக்கப்பட்டது.
இந்த முடிவை அமைச்சர் மீரா குமார் நேற்று முதல்வர் கருணாநிதியிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார். கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக மீரா தெரிவித்தார்.