தேசிய அளவில் விவசாயக் கடன்களை ரத்து செய்ய கருணாநிதி கோரிக்கை
முரசொலியில் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வழிகாட்டும் தலைவரான சோனியா காந்தி அம்மையாரை அகில இந்திய அளவிலான விவசாயிகளின் பிரதிநிதிகள் சந்தித்து விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நம்பிக்கையுடன் முறையிட்டுள்ளனர்.
தமிழகத்தில் 2006ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற நாளிலேயே ரூ.7,000 கோடி விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்தேன். இந்திய வரலாற்றிலேயே ஒரு மாநில அரசு இத்தனை கோடி ரூபாய் அளவிற்கு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்த வரலாறு இதுவரை கிடையாது.
நம்மை முன்னுதாரணமாகக் காட்டித் தான் மற்ற மாநிலங்களிலும், இந்திய அளவிலும் விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. சோனியா காந்தியை விவசாயிகளின் பிரதிநிதிகள் சந்தித்து கோரிக்கையை வைத்திருக்கிறார்கள்.
மத்திய அரசின் பட்ஜெட் வெளியாகவுள்ள இந்த நேரத்தில் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுடன் சேர்ந்து அவர்களின் கோரிக்கையை நானும் பரிந்துரை செய்கிறேன். ஜனநாயகத்தை மதித்துப் போற்றும் மாண்புடைய அம்மையார் உழவர் வேண்டுகோளை உரிய நேரத்தில் ஏற்பார் என்ற நம்பிக்கையும் உறுதியும் எனக்குண்டு என்று கூறியுள்ளார் கருணாநிதி.