ஜெ. ஜோதிடர் மீது 2வது மனைவி திடீர் புகார்
ஜெயலலிதாவின் முன்னாள் ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல். இவர் சமீபத்தில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் நான் ஜெயலலிதாவின் முன்னாள் ஜோதிடர்.
இந் நிலையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினரான கோவையைச் சேர்ந்த ராவணன் என்பவர் என்னை அழைத்து மிரட்டி சொத்துக்களை தனது பெயரில் எழுதி வைக்கும்படி மிரட்டினார் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து தேனாம்பேட்டை போலீஸார் ராவணன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில், முன்ஜாமீன் கோரி ராவணன் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் வெற்றிவேலின் 2வது மனைவியான ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளியைச் சேர்ந்த சுமதி என்பவர் சென்னை மாநகர காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதில், எனக்கும், வெற்றிவேலுக்கும் கடந்த 1995-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது எனது கணவர் ஈரோடு பகுதியில் ஜோதிடம் பார்த்து வந்தார். தினமும் 100 ரூபாய் சம்பாதிப்பார். சில நாட்கள் கழித்துதான் வெற்றிவேலுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்ததும், அவரது முதல் மனைவி ஏற்கனவே இறந்து விட்டார் என்பதும் தெரிந்தது. அதை மறைத்து என்னை திருமணம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அப்போது கேட்டதற்கு என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். மேலும் உன்னுடன் வாழ்ந்தால் முன்னேற மாட்டேன். ராஜேஸ்வரி ஜாதகம்தான் எனக்கு சரியாக பொருந்தும் என்றும் கூறினார்.
அப்போதுதான் ராஜேஸ்வரி என்பவருக்கும் எனது கணவருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ராஜேஸ்வரியை அவர் 3வது கல்யாணம் செய்து கொண்டார்.
பின்னர் எங்கள் இருவருக்கும் இடையே நடந்த விவாகரத்து வழக்கும் முடிவுக்கு வந்து கோர்ட்டு விவகாரத்து வழங்கியது.
இதன் பின்னர் என் குழந்தை என்னிடமே வளர்ந்து வந்தது. பின்னர் எனது கணவர் வெற்றிவேல் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடராக வலம் வந்தார்.
அ.தி.மு.க. ஆட்சியின் போது இப்போதைய முதல்வர் கருணாநிதியை கைது செய்ய நான்தான் நேரம் குறித்து கொடுத்தேன் என்றும் கூறினார்.
2002ம் ஆண்டு ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் என் மீது புகார் கொடுத்து போலீஸ் துணையுடன் என்னிடம் இருந்து குழந்தையை பிரித்து சென்று விட்டார்.
அதன் பிறகு குழந்தையை பார்க்க என்னை அனுமதிக்கவில்லை. மைலாப்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு குழந்தையை பார்க்க சென்ற போது அங்குள்ள ஆட்களை வைத்து என்னை மிரட்டி அனுப்பி விட்டார்.
சாதாரண வெற்றிவேலாக இருந்த எனது கணவர் தனது பெயரை ரதன் பண்டிட் வெற்றிவேல் என மாற்றிக் கொண்டார். எனது குழந்தையை ராஜேஸ்வரி அடித்து துன்புறுத்துவதாக தெரிய வந்துள்ளது.
வெற்றிவேலால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனது குழந்தையை சட்ட விரோதமாக கடத்தி வைத்துள்ளனர். எனவே வெற்றிவேல் மீதும், ராஜேஸ்வரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
இத்தனை நாட்களாக இல்லாமல் இப்போது திடீரென தனது கணவர் மீது சுமதி புகார் கொடுத்திருப்பதன் பின்னணியில் ராவணன் அண்ட் கோ இருக்கலாம் என போலீஸ் தரப்பு சந்தேகிக்கிறது.