கூட்டணி ஆட்சி: ஷெரீப், சர்தாரி முடிவு!
இஸ்லாமாபாத்: நாடாளுமன்றத்திலும், மாகாண சட்டசபைகளிலும் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியும் இணைந்து செயல்படும் என பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத் தலைவரும், பெனாசிர் பூட்டோவின் கணவருமான ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தேர்தலில் பெனாசிர் கட்சியும், நவாஸ் ஷெரீப் கட்சியும் தனிப் பெரும் கட்சிகளாக உருவெடுத்துள்ளன. இதுவரை ஆளுங்கட்சியாக இருந்து வந்த முஷாரப் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (க்யூ) படு தோல்வியைத் தழுவியது.
இதையடுத்து நவாஸ் ஷெரீப்பும், சர்தாரியும் நேற்று ஆட்சி அமைப்பது தொடர்பாக சந்தித்துப் பேசினர். இரு கட்சித் தலைவர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இஸ்லாமாபாத்தில் உள்ள சர்தாரியின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்புக்குப் பின்னர் இருவரும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
செய்தியாளர்களிடம் சர்தாரி பேசுகையில், பாகிஸ்தான் மக்கள் கட்சியும், நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சியும் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் இணைந்து செயல்பட தீர்மானித்துள்ளன.
ஜனநாயகத்தைக் காக்க, பாகிஸ்தானைக் காக்க, பாகிஸ்தானை வளப்படுத்த நாங்கள் இருவரும் சேர்ந்து செயல்பட வுள்ளோம்.
நாடாளுமன்றத்தில் மட்டுமல்லாது, மாகாணங்களிலும் இணைந்து செயல்படுவோம். இணைந்து ஆட்சி அமைப்போம் என்றார்.
இதையடுத்து இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. இதனால் முஷாரப்புக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இடைத் தேர்தலில் ஷெரீப் போட்டி:
நேற்றைய கூட்டத்திற்கு முன்னதாக நவாஸ் ஷெரீப் தனது கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் தற்போது எம்.பி.யாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் ஷெரீப் போட்டியிடவுள்ளதாக அவரது கட்சியின் தலைவர் ராஜா சபாருல் ஹக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கட்சியின் நாடாளுமன்றத் தலைவராக ஷெரீப்பை கட்சி எம்.பிக்கள் அங்கீகரித்துள்ளனர். அதற்கேற்ற வகையில் அவர் விரைவில் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்றார்.
முஷாரப் அரசால் தேர்தலில் போட்டியிட முடியாமல் தடை விதிக்கப்பட்டவர் ஷெரீப். அவர் வேட்பு மனு தாக்கல் செய்தபோது அதை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்து விட்டது என்பது நினைவிருக்கலாம்.
முஷாரப் நாட்கள எண்ணப்படுகின்றன-ஷெரீப்:
முன்னதாக சர்தாரி வீட்டுக்கு செல்வற்கு முன்பு நீதிபதிகள் காலனிக்கு ஷெரீப் சென்றார். அங்கு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் செளத்ரியின் வீடு நோக்கி பேரணி செல்ல முயன்ற வக்கீல்களை சந்தித்தார்.
அவர்களிடையே பேசிய ஷெரீப், பதவி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து நீதிபதிகளும் மீண்டும் பதவியில் அமர்த்தப்படுவார்கள். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
முஷாரப்பின் பதவிக்காலம் முடியப் போகிறது. அவரது நாட்கள் எண்ணப்படுகின்றன. எனவே பதவி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து நீதிபதிகளும் மீண்டும் பதவியைப் பெறுவார்கள். இப்திகார் செளத்ரி விரைவில் மீண்டும் நீதிமன்றத்திற்கு வருவார்.
எனவே வக்கீல்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். அமைதி காக்க வேண்டும். உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
இத்தனை காலம் போராடி விட்டீர்கள். இன்னும் சில நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று பேசினார் ஷெரீப். இதையடுத்து வக்கீல்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர்.