திரிபுராவில் சட்டசபை தேர்தல்-அமைதியான வாக்குபதிவு
வங்கதேசத்தை ஒட்டியுள்ள வட கிழக்கு மாநிலமான திரிபுராவில் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு இன்று தேர்தல் நடந்தது.
கடந்த பல ஆண்டுகளாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணிதான் இங்கு ஆட்சி புரிந்து வருகிறது. இந்த முறை கம்யூனிஸ்ட் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
மொத்தம் 313 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்களில் 28 பேர் பெண்கள். 20 லட்சத்து 35 ஆயிரத்து 877 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 56 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணிக் கட்சிகளான புரட்சிகர சோசலிஷ கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தலா ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி 47 தொகுதிகளில் போட்டியிடுகிரது. அதன் கூட்டணிக் கட்சிகளான திரிபுரா தேசியவாத கட்சியும், பி.டி.எஸ். கட்சியும் முறையே 11 மற்றும் 2 சீட்களில் போட்டியிடுகின்றன.
தீவிரவாதிகள் தாக்குதல் அபாயம் இருப்பதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 200 கம்பெனி கூடுதல் மத்திய புற ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குச் சாவடிகள் அனைத்தும் புற ராணுவப் படையினரின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது.
நக்சலைட்டுகள், தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகம் உள்ள தொலைதூர பகுதிகளில் திரிபுரா துப்பாக்கிப் படையினரும், மாநில புறக்காவல் படையினரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.