இலங்கையில் தமிழர்கள் வீடுகள் மீது குண்டுவீச்சு-3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி
{image-lanka-bombing-(3)250_23022008.jpg tamil.oneindia.com}கொழும்பு: கிளிநொச்சியில் தமிழர்களின் வீடுகள் மீது இலங்கை விமானப்படை நடத்திய கொடூர தாக்குதலில் 8 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் 3 பேர் சிறார்கள்.
விடுதலைப் புலிகள் மீதான தாக்குதலை இலங்கை படைகள் முடுக்கி விட்டுள்ளன. தினசரி பலர் இந்த சண்டைகளில் பலியாகி வருகின்றனர்.
புலிகளின் தலைமையகமான கிளிநொச்சியில் தற்போது படைகள் குறி வைத்து தாக்குதலைத் தொடங்கியுள்ளன. கிளிநொச்சியின் மேற்கில் உள்ள கிறாஞ்சி என்ற இடத்தில் புலிகளின் கடற்படை முகாம் மீது இலங்கை விமானப்படைகள் சரமாரியாக குண்டு வீசித்தாக்கின.
மேலும் அப்பாவி தமிழர்களின் வீடுகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. இதில் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் 3 பேர் சிறார்கள். பத்து பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று புலிகளின் அமைதிச் செயலகம் தெரிவித்துள்ளது.
அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா. உதவி பொதுச் செயலாளர் ஏஞ்சலா கானே இலங்கை வந்துள்ள நிலையில் விமானப்படையினர் அப்பாவிகள் மீது நடத்தியுள்ள தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் பிரதிநிதியாக ஏஞ்சலா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.