சோனியாவிடம் 'டோஸ்' வாங்கிய அருண்குமார்!
தமிழக காங்கிரஸ் பார்வையாளராக சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த அருண்குமார் நியமிக்கப்பட்டார். ஆனால், இவர் பொறுப்பேற்றது முதல் கருணாநிதியை மரியாதை நிமித்தமாகக் கூட சந்திக்கவில்லை.
மேலும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போதெல்லாம் திமுகவை வாரி விட்டு வருவதோடு, தேமுதிக தலைவர் விஜய்காந்தை பாராட்டி வருகிறார்.
இந் நிலையில் சமீபத்தில் விஜய்காந்துடன் அரசியல் பேசினேன். ஆனால், அதன் விவரத்தை நேரம் வரும்போது தெரிவிப்பேன் என்று திரியைக் கொளுத்திப் போட்டார்.
ஏற்கனவே சேது சமுத்திர திட்ட விவகாரத்தில் மத்திய அரசு பாஜகவுக்கு பணிந்து பி்ன் வாங்குவதால் திமுக-காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர்கள் பாலுவும் சோனியாவின் வலது கரமான அம்பிகா சோனியும் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவமும் நடந்தது.
இந் நிலையில் இடையில் புகுந்து அருண்குமாரும் பிரச்சனை கிளப்ப, தனது எரிச்சலை சில நிகழ்ச்சிகளில் பேசுகையில் மறைமுகமாகக் குறிப்பிட்டால் முதல்வர் கருணாநிதி.
காங்கிரஸ் மத்திய தலைமைக்குத் தெரியாமலேயே இங்கு சிலர் குட்டி கலாட்டா செய்து வருவதாகவும் கூறியிருந்தார். இதற்கிடையே சமீபத்தில் சோனியாவை திமுக எம்பியான கனிமொழியும் சந்தித்துவிட்டு வந்தார்.
இந் நிலையில் தி.க. தலைவர் வீரமணி மூலமாக அருண்குமார் மீது கடும் விமர்சனத்தை முன் வைத்தது திமுக.
அவரை ஆந்திர பிராமணர் என விமர்சித்த வீரமணி, திமுகவை காங்கிரஸ் ஏமாற்ற முயல்வதாக டைரக்டராக குற்றம் சாட்டினார்.
ஆனாலும் காங்கிரஸ் தரப்பில் அருண்குமாரின் விஜய்காந்த் பேச்சு தொடர்பாக எந்த விளக்கமும் திமுகவுக்கு தரப்படவில்லை.
இந் நிலையில் அருண்குமாரின் பேச்சைக் கண்டித்து, திமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த விஷயத்தை சோனியாவிடம் திமுக தலைமை நேரடியாக எடுத்துப் பேசியதாதவும் தெரிகிறது.
இதைடுத்து அருண்குமாருக்கு கடந்த வாரம் டெல்லியில் இருந்து ஸ்பெஷல் ஓலை வந்தது. உடனே சோனியாவை சந்திக்குமாறு அழைக்கப்பட்டார்.
அடடே, நமக்கு நல்ல நேரம் ஆரம்பித்துவிட்டது என்று டெல்லி மகிழ்ச்சியாக ஓடிய அருண்குமார் சோனியாவை சந்தித்தபோது செமையான டோஸ் கிடைத்துள்ளது.
நீங்க தான் காங்கிரஸ் கட்சி தலைவரா என்று ஆரம்பித்த சோனியா, நீங்க தான் கூட்டணி எல்லாம் முடிவு செய்பவரா என்று கேள்வி கேட்டதோடு விஜயகாந்தை சந்தித்து பேசிய விவகாரத்தை, எதற்காக பத்திரிகையாளர்களிடம் சொன்னீர்கள்.
யாரைக் கேட்டு அப்படி பேசினீர்கள் என்று சோனியா காய்ச்சி எடுத்ததாக காங்கிரஸ் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து வியர்த்து விறுவிறுத்து நடுக்கத்துடன் வெளியில் வந்த அருண்குமார் உடனடியாக டெல்லியில் உள்ள தமிழக பத்திரிக்கையாளர்களை சந்தித்து, அய்யா முதல்வர் கருணாநிதி மிக மூத்த தலைவர். அவரை நான் மிக விரைவில் சந்தித்துப் பேசுவேன் என்று சொல்லிவிட்டு ஓடினார்.
திடீரென இப்படி பேசுகிறாரே என்று கிண்டிய போதுதான் அருண்குமாருக்கு சோனியாவிடம் கிடைத்த டோஸ் விவரம் பத்திரிக்கையாளர்களுக்குத் தெரியவந்தது.
திமுக விஷயத்தில் என்னைக் கேட்காமல் யாரும் ஏதும் பேசக் கூடாது என சோனியா கடுமையான எச்சரிக்கையை அனைத்து மூத்த தலைவர்களுக்கும் போட்டுள்ளாராம்.
கருணாநிதியை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டாலும் கிடைக்குமா என்று தெரியாத நிலையில் அறிவாலயம் பக்கம் போகவே நடுங்கிக் கொண்டிருக்கிறாராம் அருண்குமார்.
இது தேவையா...