இலங்கை அகதிகள் வங்கிக் கணக்கு தொடங்கலாம்!
சென்னை: தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள், பேங்க் ஆப் சிலோன் வங்கியில், வருகிற 25ம் தேதி முதல் கணக்கு தொடங்கி பணத்தை சேமிக்கலாம் என இலங்கை துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள பேங்க் ஆப் சிலோனில் வருகிற 25ம் தேதி முதல் இலங்கை தமிழ் அகதிகள் கணக்கு தொடங்கி பணத்தைப் போட்டு வரலாம். அதற்கான ஏற்பாடுகளை இலங்கை துணைத் தூதரகமும், ஈழ அகதிகள் மறுவாழ்வுக் கழகமும் இணைந்து செய்துள்ளன.
ஏற்கனவே இலங்கையில் நடத்தப்படும் பத்தாவது வகுப்புத் தேர்வு, இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக கடல் கடந்து சென்னையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இங்குள்ள தமிழ் அகதி மாணவ, மாணவியரின் நலனுக்காக தேர்வு இங்கேயே நடத்தப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் வங்கிக் கணக்கு தொடங்கவும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிலோன் வங்கியில் கணக்கு தொடங்குவதன் மூலம், இலங்கைக்குத் திரும்பிச் செல்லும்போது தங்களது சேமிப்பையும் எளிதாக இலங்கை வங்கிகளுக்கு மாற்றிக் கொள்ள இதன் மூலம் வழி ஏற்படுவதாக இலங்கைத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.