மலேசியா: 'ஹிண்ட்ராப்' மனோகரன் தேர்தலில் போட்டி
கோலாலம்பூர்: உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விசாரணையே இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மலேசிய இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழுவின் தலைவர்களில் ஒருவரான மனோகரன், அந்த நாட்டு தேர்தலில் போட்டியிடுகிறார்.
மலேசியாவில் மார்ச் 8ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி மலேசியா முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது.
நேற்று முதல் மனு தாக்கல் செய்வது தொடங்கியது. பிரசாரமும் தொடங்கியுள்ளது. முதல் நாளிலேயே 222 எம்.பி தொகுதிகள் மற்றும் 505 மாநில சட்டசபைத் தொகுதிகளுக்கு நூற்றுக்கணக்கானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
பிரதமர் அப்துல்லா படாவியும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது பாரிசன் தேசிய கூட்டணியின் 6 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
ஹிண்ட்ராப் மனோகரன், சிவநேசன் போட்டி
இந்த நிலையில், மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், தீவிரவாத செயலில் ஈடுபட்டதாக கூறி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹிண்ட்ராப் அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான மனோகரன், மலேசிய தேர்தலில் போட்டியிடுகிறார். அதேபோல, மலேசிய இந்தியர்களின் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய ஏ.சிவநேசனும் தேர்தலில் போட்டியிடுகிறார்.
இவர்கள் எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடுகின்றனர். சிவநேசன், ஆளும் கூட்டணியில் உள்ள மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான வீரசிங்கத்தை எதிர்த்து பேரக் மாகாணம், சுண்ட்காய் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மனோகரன், கோடா ஆலம் ஷான் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாரிசன் தேசிய கூட்டணியின் சார்பில் சீன வம்சாவளியைச் ேசர்ந்த சிங் சு சென் போட்டியிடுகிறார்.
கடந்த 1957ம் ஆண்டு முதல் பாரிசன் தேசியக் கூட்டணிதான் மலேசியாவில் ஆட்சி புரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை பாரிசன் கூட்டணிக்கு இலகுவான வெற்றி கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இந்திய வம்சவாளியினர் பிரதமர் படாவி மீதும், அவரது ஆட்சி மீதும் பெரும் அதிருப்தியுடன் உள்ளனர். குறிப்பாக ஹிண்ட்ராப் அமைப்பைச் சேர்ந்த ஐந்து தமிழர்கள், அடக்குமுறைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் அரசு மீது கடும் கோபத்துடன் உள்ளனர். இது எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு சாதகமாக அமையும் எனக் கருதப்படுகிறது.