மதுரை போலீஸுக்கு ஏடிஜிபி விஜயக்குமார் புது உத்தரவு
மதுரை: மதுரையில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து உடனுக்குடன் தகவல் தர வேண்டும் என சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி விஜயக்குமார் மதுரை போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மு.க.அழகிரியைக் கண்காணிக்க இந்த உத்தரவா அல்லது அவரது பெயரை தவறாகப் பயன்படுத்துபவர்களைக் கண்காணிக்கவா என்று புரியாமல் குழம்பிப் போயுள்ளனர் மதுரை காக்கிகள்.
விஜயகுமார் மதுரை போலீசாருக்கு ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் மதுரை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற குற்றச் சம்பவங்கள் குறித்து தினசரி டிஜிபி அலுவலகத்திற்கு தகவல அனுப்ப வேண்டும்.
அதே போன்று மதுரையில் இருந்து வெளியாகும் தினசரி நாளிதழ்களில் வெளியாகும் முக்கிய செய்திகளை சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள காவல்துறைத் தலைவர் கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு காவல் துறையில் உள்ள நுண்ணறிவு பிரிவு, தனிப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.