திருமணம் செய்து வைக்க மறுத்த தந்தையை கொன்ற மகன்
விளாத்திகுளம்: திருமணம் செய்து வைக்க மறுத்த தந்தையை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார் மகன்.
விளாத்திகுளத்தை அடுத்த குளத்தூரைச் சேர்ந்தவர் சண்முகம். விவசாயியான இவருக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். சண்முகம் சிறந்த சிலம்பாட்ட வீரர். இவரது கடைசி மகன் வாசுதேவன்.
வாசுதேவன் வேலை எதற்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இதை சண்முகம் கண்டித்தார். இதனால் தந்தை-மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந் நிலையில் வாசுதேவன் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தந்தையிடம் கூறினார். அதற்கு அவர் தற்போது என்னிடம் பணம் இல்லை. விவசாய வேலை நடந்து கொண்டிருக்கிறது. சிறிது காலம் கழித்து திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறவே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் இருவரும் படுக்கப் போய் விட்டனர். இந் நிலையில், இரவு 11.30 மணியளவில் தந்தையை எழுப்பி எனக்கு திருமணம் செய்து வை என்று மீண்டும் கூறினார் வாசுதேவன்.
சண்முகம் மீண்டும் திட்டவே ஆத்திரமடைந்த வாசுதேவன், அருகில் கிடந்த அரிவாளை எடுத்து சண்முகத்தின் தலை மற்றும் கழுத்தில் சராமரியாக வெட்டினார். இதில் அவர் தலை துண்டாகி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் சண்முகம்.
சண்முகத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த பார்த்தனர். அங்கு சண்முகத்தின் உடல் அருகே வாசுதேவன் அரிவாளுடன் உட்கார்ந்திருந்தார். உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து வாசுதேவனைக் கைது செய்தனர்.