மலேசிய தேர்தலில் 89 வயது பாட்டி போட்டி!
கோலாலம்பூர்: மலேசிய தேர்தலில் 89 வயதான போட்டி போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். அவர்தான் வேட்பாளர்களிலேயே மிகவும் வயதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் மார்ச் 8ம் தேதி நாடாளுமன்றத்திற்கும், மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் குவாலா டெரங்கனு எம்.பி தொகுதியில் போட்டியிட 89 வயதாகும் மைமூன் யூசுப் என்ற பாட்டி மனு தாக்கல் செய்துள்ளார். தனது தோழிகளான சினா (67), செமா (53) ஆகியோருடன் வந்து மனு தாக்கல் செய்துள்ளார் மைமூன் யூசுப்.
வேட்பு மனு தாக்கலுக்குப் பின்னர் மைமூன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்து அசத்தினார். தற்போதைய அரசின் தவறான செயல்களை நான் எம்.பி. ஆனால் சரி செய்வேன். அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பேன் என்றார் மைமூன்.
மேலும், வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக ரூ. 12 ஆயிரம் தேவைப்பட்டது. மேலும் பிரசார காப்புத் தொகையாக ரூ. 6000 தேவைப்பட்டது. அதுகுறித்து நான் கவலைப்படவில்லை. அந்தத் தொகையை நான் சேகரித்து விட்டேன்.
என்னால் நன்கு பேச முடியும். நடந்து சென்று ஓட்டு கேட்க முடியும். எனவே தேர்தலில் போட்டியிட முடிவு செய்தேன் என்றார் மைமூன்.
மைமூன், கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களில் போட்டியிட நான்கு முறை மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவரது வேட்பு மனுக்கள் முறையாக இல்லாத காரணத்தால் அவை நிராகரிக்கப்பட்டு விட்டன. ஆனால் இந்த முறை அவர் வெற்றிகரமாக வேட்பாளராகி விட்டார்.
மலேசியத் தேர்தலில் போட்டியிடும் அதிக வயதான வேட்பாளர் என்ற பெருமையும் மைமூனுக்குக் கிடைத்துள்ளது.