'என் வேலையை முடிச்சுட்டேன்'...சுஜாதா!!
சென்னை: மறைந்த எழுத்தாளர் சுஜாதா ஏராளமான திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம், கதை எழுதியுள்ளார். அவரது பங்களிப்பால் திரையுலகம் பரிமளித்துள்ளது.
சுஜாதாவின் திரையுலக வாழ்க்கை ரஜினிகாந்த், ஜெய்சங்கர் இணைந்து நடித்த காயத்ரி படத்திலிருந்து தொடங்கியது. அவரது நாவலான காயத்ரியை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது.
இதையடுத்து சுஜாதாவின் இன்னொரு பிரபல கதையான பிரியாவும் படமானது. இதிலும் ரஜினியே நடித்தார். அதன் பின்னர் கரையெல்லாம் செண்பகப்பூ, நினைத்தாலே இனிக்கும், பொய் முகங்கள், வணக்கத்துக்குரிய காதலியே ஆகிய படங்களும் சுஜாதாவின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான படங்கள்.
ஆர்யபட்டா, 24 ரூபாய் தீவு, அனிதா இளம் மனைவி, நிர்வாண நகரம் ஆகியவை கன்னடத்தில் படமாகியுள்ளன. பத்து செகன்ட் முத்தம் கதையை இயக்குநர் மெளலி, தெலுங்கில் படமாக்கினார். அஸ்வினி நாச்சப்பாவை ஹீரோயினாகக் கொண்டு, அஸ்வினி என்ற பெயரில்
மெளலி படமாக்கினார்.
சினிமாவுக்கென்றே முதன் முதலில் சுஜாதா உருவாக்கிய கதை, திரைக்கதை, வசனம் கமல்ஹாசனின் விக்ரம். இந்தப் படம்தான் தமிழில் அறிவியலை மையமாகக் கொண்டு வந்த முதல் படமும் கூட.
பின்னர் மணிரத்னம் மற்றும் ஷங்கரின் ஆஸ்தான திரைக் கதாசிரியராக பின்னர் மாறினார் சுஜாதா.
இந்தியன், முதல்வன், ஜீன்ஸ், அந்நியன், பாய்ஸ் என ஷங்கரும், சுஜாதாவும் இணைந்து பணியாற்றினர். உச்சகட்டமாக அமைந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி.
இந்தியன், முதல்வன், அந்நியன், பாய்ஸ் என ஷங்கரும், சுஜாதாவும் இணைந்து பணியாற்றினர். உச்சகட்டமாக அமைந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி. ரஜினி படத்துக்கும் தன்னால் வசனம் எழுத முடியும் என்பதை நிரூபித்து சிவாஜி மூலம் பெயர் தட்டிச் சென்றார் சுஜாதா.
தற்போது ஷங்கரின் ரோபோட் படத்திற்காக தீவிரமாக உழைத்துக் கொண்டிருந்தார் சுஜாதா. ரோபோட் என்ற பெயருக்கு மாற்றாக இயந்திரா, இயந்திரன் என்ற பெயர்களையும் அவர் ஷங்கருக்கு பரிந்துரைத்திருந்தார். இந்த நிலையில் காலம் அவரை காவு கொண்டிருக்கிறது.
இதேபோல மணிரத்னத்தின் இருவர், ஆய்த எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால், குரு ஆகிய படங்களிலும் பணியாற்றியுள்ளார் சுஜாதா. மணிரத்னம் விரைவில் இயக்கவுள்ள அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய் இணைந்து நடிக்கவுள்ள படத்திற்கும் அவர்தான் வசனம், திரைக்கதை அமைப்பதாக இருந்தது.
கடைசிப் படைப்பு:
ரோபோட் படத்திற்காக தீவிரமாக உழைத்துக் கொண்டிருந்தார் சுஜாதா. ரோபோட் என்ற பெயருக்கு மாற்றாக இயந்திரன் என்ற பெயரையும் அவர் ஷங்கருக்கு பரிந்துரைத்திருந்தார். இந்த நிலையில் காலம் அவரை காவு கொண்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்புதான் ஷங்கரின் ரோபோட் படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்துக் கொடுத்தாராம் சுஜாதா. ஸ்கிரிப்ட்டை ஷங்கரிடம் கொடுத்த அவர், ''ஷங்கர் எனது வேலையை முடித்து விட்டேன். இனி எனக்கு டென்ஷன் இல்லை. இதுவே எனக்கு கடைசிப் படமாக இருந்தாலும் கவலை இல்லை'' என்றாராம்.
அதேபோல, ஸ்ரீபிரியாவின் தயாரிப்பில் சிம்ரன் நடிக்க ஜெயா டிவியில் ஒளிபரப்பாகவுள்ள 'சிம்ரன்' சின்னத்திரையின் முதல் கதையே சுஜாதாவின் கதைதான்.
அதுவே அவரது கடைசிப் படைப்பும் ஆகியுள்ளது.
சுஜாதாவின் மறைவு தமிழ் படைப்புலகம் மாத்திரமல்ல கலையுலகத்துக்கும் பேரிழப்பு தான்.